IPO-வில் லாபம் உறுதியா? முதலீட்டாளர்களுக்கு Zerodha நிதின் காமத்தின் Warning!

தற்போது IPO-க்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களும் IPO-க்களை விரும்புகிறார்கள்.

ஆனால், IPO-க்கள் பற்றிய உண்மையை இரண்டு புகைப்படங்கள் மூலம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார் ஜீரோதாவின் இணை நிறுவனர் நிதின் காமத்.

“ஒட்டுமொத்தப் பங்குச்சந்தையும் பெரிய மாற்றமின்றி ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. ஆனால், IPOs, OFS, FPO போன்ற முதன்மைச் சந்தைகளோ படுவேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஜீரோதா நிதின் காமத்

இதுவரை, இவை மூலம் திரட்டப்பட்ட மூலதனத்தைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக இருக்கும் அல்லது அதைத் தாண்டிவிடும். அதுமட்டுமின்றி, இனி வரவிருக்கும் புதிய IPO-க்களின் பட்டியலும் மிக நீளமாக உள்ளது.

ஜீரோதாவில் கூட, புதிய IPO-க்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. IPO-வில் முதலீடு செய்வதற்காகவே பிரத்யேகமாகப் புதிய கணக்குகளைத் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

IPO மூலம் மிக எளிதாகப் பணம் சம்பாதித்துவிடலாம் என்று நீங்கள் நம்பினால், இந்த இரண்டாவது வரைபடம் உங்களுக்கான உண்மையான வாய்ப்புகளைப் புரியவைக்கும்.

கடந்த சில ஆண்டுகளில், பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளில் கிடைத்த லாபத்தை இது காட்டுகிறது. தோராயமாக 74 முதல் 80 சதவீதமான IPO-க்கள் அவற்றின் வெளியீட்டு விலையை விட உயர்வாகவே பட்டியலிடப்பட்டன.

ஆனால், அவற்றில் பெரும்பான்மையான பங்குகள் பெரிய அளவிலான லாபம் எதையும் வழங்கிவிடவில்லை.

சமீபத்திய காலத்தில், 35 சதவீதமான பங்குகள் வெறும் 0 முதல் 10 சதவீதம் வரையிலான சொற்ப லாபத்திலேயே பட்டியலிடப்பட்டன.

அதே வேளையில், சுமார் 26 சதவீதமான பங்குகள் வெளியீட்டு விலையை விடக் குறைவான விலையிலேயே சந்தைக்கு வந்தன.

சொல்லப்போனால், இந்த வரைபடம் காட்டாத ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. ஒரு IPO எந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமடைகிறதோ, அந்த அளவிற்குப் பங்குகள் உங்களுக்கு ஒதுக்கீடாவதற்கான வாய்ப்புகளும் வெகுவாகக் குறையும்.

இருந்தாலும், நம்பிக்கைதானே எல்லாம்!” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.