``கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம்

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை இணைய தளத்தில் பார்த்தேன். அதற்கான விளக்கமே இந்த அறிக்கை.

கொளத்தூர் EVM Verification

இந்த இரண்டு வழக்குகளுமே, கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் , தலைவர் தந்த ஒப்புதலால் தாக்கல் செய்யப்பட்டவை.

WP 34884/2026- தேர்தல் ஆணையத்தின் EVM-களை சரி பார்ப்பதற்க்கான வழிகாட்டு நடைமுறை - SOP உச்ச நீதிமன்ற உத்திரவிற்க்கு எதிரானதாக உள்ளதால் அதனை நீக்கறவு செய்ய வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டது. அது தனி நபருக்கான மனு அல்ல. இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வழக்கு. 2024 வழிகாட்டு நடைமுறை - SOP யை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2025 வழிகாட்டு நடைமுறை - SOP வந்து விட்டதால் அதனை எதிர்த்து மனு செய்யும் உரிமையுடன் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.

என்.ஆர். இளங்கோ
என்.ஆர். இளங்கோ

2024 ல் உச்ச நீதி மன்றம் EVM கருவிகளில் சந்தேகம் இருந்தால் 2 ஆம் அல்லது 3 ஆம் இடம் பெறும் வேட்பாளர்கள் 5% கருவிகளை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி EVM கருவிகளின் BURNT MEMORY ஐ சரி பார்க்கலாம் என உத்திரவிட்டது.

திராவிட முன்னேற்ற கழக சட்ட துறையின் சார்பில் நான் கழகத்தலைவரிடம் இந்த நிலையை சொல்லி, கொளத்தூர் தொகுதியில் EVM களை சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். தலைவரும் ஒப்புதல் தந்தார்.

29.07.2026-லிருந்து 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளின் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை அல்லது தலைவரின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி(Ballot Unit)-ஐ வாக்கு பதிவு இயந்திரத்தால் (Control Unit) அடையாளம் காண இயலவில்லை. ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக , நிரப்பப்படாமல் இருந்தது.

தேர்தல் ஆணையம் இந்த பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி விளக்கங்களை தரவில்லை.

1. 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி தேர்தல் முடிவுகளுக்கு பின் 45 நாட்களில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

2. அதுவும் பிரிவு 100ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

3. யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய முடியாது.

4. வாக்கு இயந்திரங்களை ஏறக்குறைய 3 மாதங்களுக்கு பிறகே சரிபார்த்த தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போகச்செய்யும் வகையில் நடத்தியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும் என கழக சட்டத்துறை, தலைவரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. தலைவர் அவர்கள் முதலில் வேண்டாமென்று நினைத்தார். பின் இது குறித்து விளக்கங்களை கேட்டறிந்து ஒப்புதல் தந்தார்.

கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்கு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் மற்றும் VVPAT ல் உள்ள வாக்கு சீட்டுகளை சரி பார்க்க வேண்டும். இதனின் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே. வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது.

Article 329(b)ன் படி தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே தேர்தலை செல்லாது என்றும் வேறொரு வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும், ஏன் EVM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோதும் இது போன்ற நிகழ்வுகளை சட்டமியற்றுபவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

EVM
EVM

2024 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்க உரிமை தரப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்கள் முறையாக இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிமன்றங்களே தீர்ப்பளிக்க வேண்டும்.எனவே ஏற்கனவே நடந்த பரிசோதனையில் 30% சதவிகித இயந்திரங்கள் பழுதானவை என்றால் அனைத்து இயந்திரங்களையும் சோதித்தால் கழக தலைவர் அவர்களே வெற்றி பெறுவார் என்பதில் அய்யமில்லை. சட்டத்தில் இடமில்லை என்கிறது தேர்தல் ஆணையம், இதற்க்கான சட்டம் உருவாக்கப்படவில்லை அதனை ஆய்ந்து, நீதியை வழங்கிடத்தான் நீதிமன்றம் என்கிறோம் நாம்.

தமது தீர்ப்பில் உயர் நீதி மன்றம் இறுதியாக “ஏற்புடைமை (Maintanability) குறித்த மேற்கண்ட முடிவைக் கருதி, சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ, 05.08.2026 தேதியிட்ட எதிர்க்கப்பட்ட உத்தரவின் சரியான தன்மை குறித்தோ ஆராய வேண்டிய அவசியம் இல்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விதி 49-T மீறப்பட்டதாகக் கூறப்படுவது, VVPAT கருவிகளின் செயலிழப்பு, மற்றும் வாக்குச்சாவடி எண்.208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட, தகுதி சார்ந்த அனைத்து வாதங்களும், தேவைப்பட்டால் உரிய மன்றத்தின் முன் எடுத்துரைக்கப்படுவதற்காக அனுமதி தரப்படுகிறது.

உயர் நீதிமன்றம்

அதன்படி, ரிட் மனு ஏற்புடையதன்று எனத் தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டப்படி தனக்குக் கிடைக்கக்கூடிய தீர்வை நாடுவதற்கு மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

நீதிக் கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர் சட்டப்போரட்டமும் , போரட்டங்களுமே , இட ஒதுக்கீட்டை , அரசியல் அமைப்பு திருத்தமாக கொண்டு வந்தன.

வாக்கு பதிவு இயந்திரங்களும் அப்படித்தான், நீதிமன்றம், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று சொன்னாலும்கூட வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின் அதனை சோதனை செய்யும் நடைமுறை, அந்த சோதனையில் இயந்திரங்கள் தவறாக இருந்தால் அதற்கான தீர்வு ஆகியவற்றிக்கான விடை கிடைக்க வேண்டும்.

என்.ஆர். இளங்கோ
என்.ஆர். இளங்கோ

இந்தியாவில் இது போன்ற நிலை ஏற்பட்டதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை. சட்டமும், நீதியும் நல்ல விடையினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

ஆங்கில கருத்தொன்றுதான் நினைவுக்கு வருகிறது.

“I MAY BE WRONG, BUT I AM CLEAR”

கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் , வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே என்பதே , அந்த தெளிவு." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.