`ரூ.58 கோடி வரி கட்டியும் மோசமான சாலைகள் - ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர் கடும் அதிருப்தி!

மும்பையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் அனிருதா மால்பானி. இவர் சமீபத்தில் டெல்லி அருகில் உள்ள குருகிராம் சென்று இருந்தார். அங்கு மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், குப்பைகளும் நிரம்பி காணப்பட்டன. அதில் பயணம் செய்த அனுபவம் குறித்து அனிருதா மால்பானி தனது எக்ஸ்தள பக்கத்தில், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் குறித்த கவலை தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதோடு பருவமழைக்குப் பிறகு குருகிராமின் செக்டார் 23-ல் உள்ள முக்கியச் சந்தைப் பகுதியில் கடுமையான நீர் தேக்கம், சேறு மற்றும் சிதறிக் கிடக்கும் குப்பைகள் ஆகியவற்றைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, `இதற்குத்தான் நமது வரிப்பணம் செலவிடப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் நான் ரூ.58 கோடி வரி கட்டி இருக்கிறேன். வரி செலுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தச் செலவுக்கான உரிய பலன் எனக்குக் கிடைக்காததுதான் வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

அனிருதா

டாக்டராக இருந்து தொழில்முனைவோராக மாறிய அனிருதா, வருமான வரியாக தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.58 கோடி எடுக்கப்பட்டு இருக்கும் தனது வங்கிக் கணக்கு விவர அறிக்கையையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை 7,99,800-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் 2,000 பேர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு பயனாளி பதிவிட்ட கமென்ட்டில், ``தவறாக நினைக்காதீர்கள், ஆனால் நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால், உடனடியாக மொனாக்கோ அல்லது ஹாங்காங்கிற்குச் சென்று, அங்கிருந்தபடியே இந்தியர்களின் வருங்கால சந்ததியினருக்கு என்னால் முடிந்த வழிகளில் உதவியிருப்பேன். இதற்கெனச் செலவிடப்படும் பணம் அனைத்தும் அதிகாரிகளின் பைகளுக்குத்தான் செல்கிறது. அவர்கள் இதனால் கொழுத்துப்போய், மேலும் ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் அனிருதா மால்பானி இதற்கு அளித்துள்ள பதிலில், "நான் இந்த பணத்தை இந்தியாவில் ஈட்டியுள்ளேன். எனவே இதை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னிடமிருந்து வசூலிக்கப்படும் பணத்திற்கு ஏற்ற பயனை அவர்கள் அளிக்க வேண்டும். இது அதிகப்படியான கோரிக்கையா?" என்று கேட்டுள்ளார்.

மில்லினியம் நகரம் என்று அழைக்கப்படும் குருகிராமில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான கம்பெனிகள் இருக்கின்றன. ஆனாலும் கடுமையான நகராட்சி வசதி குறைபாடுகள் இருப்பதாக அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.