ரூ.1 லட்சம் முதலீட்டிக்கு ரூ.8000 மாத வட்டி- ரூ.300 கோடியைச் சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது
சேலம் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயராகவன்- ராகினி தம்பதி மற்றும் மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பிராஃபிட் எவர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 2024-ம் ஆண்டு தொடங்கியிருக்கிறார்கள்.
தங்களின் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தொகை வழங்கப்படும். மேலும் அதிக முதலீட்டிற்கு ஏற்ப பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனக் கவர்ச்சிகர திட்டங்களை மக்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை உண்மையென நம்பிய நடுத்தர மக்கள் பலரும் தங்களின் சேமிப்பு தொகையை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிலருக்கு வட்டித் தொகையை நிறுவனம் மூலம் வழங்கியிருக்கிறார்கள்.
இதனால் கவரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வட்டி தொகை வழங்கப்படாத காரணத்தால் சந்தேகமடைந்த மக்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கானவர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில், நிதி நிறுவன இயக்குநரான மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சேலம் தம்பியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், "மக்களின் பேராசையை மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த மெகா மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஏமாந்திருக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் பலரும் தங்களின் வீடுகளை அடமானம் வைத்து முதலீடு செய்திருக்கிறார்கள். இரண்டு மாதம் மட்டுமே வட்டி கொடுத்திருக்கிறார்கள். மூன்றாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


