I’m Game: `காந்தா படத்தில் நடித்தபோது எனக்கு அந்த பயம் இருந்தது - துல்கர் சல்மான் ஓப்பன் டாக்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

துல்கர் சல்மான்

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் துல்கர் சல்மான், ``நான் எந்தப் படத்தை விளம்பரப்படுத்த வந்தாலும், தமிழ்நாட்டில் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எங்களுடைய உழைப்பைக் காண்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நல்ல படங்களை இங்குள்ள மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நேரடித் தமிழ்ப் படம் போலவே இருக்கும்.

பல முன்னணித் தமிழ் நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். எனக்கு ஒரு கதை அல்லது கதாபாத்திரம் கேட்கும்போது இதை நாம எப்படிப் பண்ணப் போறோம்? என்ற பயம் வந்தாலே, அந்தப் படத்தை உடனே ஒப்புக்கொண்டு செய்யத் தொடங்கிவிடுவேன்.

காந்தா படத்தில் நடித்தபோதும் எனக்கு அந்த பயம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளேன். ஷூட்டிங் சமயத்தில் சில நேரங்களில் இந்த கதாபாத்திரத்திற்குத் தேவையான மென்டல் கெபாசிட்டி நமக்கு இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கு சவாலாக இருந்தது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் எப்படி ஒரு எதிர்பாராத ஜானர் மாற்றம் (Genre shift) இருந்ததோ, அதேபோல் இந்தப் படத்திலும் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதனால்தான் படத்தின் முக்கியக் திருப்பங்களை நாங்கள் ட்ரைலரில் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. செப்டம்பர் 3 அன்று திரையரங்கில் இதைப் பார்த்து மக்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.