Doctor Vikatan: அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால், ஹார்ட் அட்டாக் வரலாம் என்பது உண்மையா?
Doctor Vikatan: வாழ்க்கையில் உணர்ச்சி வசப்படுவது என்பது யாருக்குமே பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்படுது இதயநலலைப் பாதிக்குமா.... இதற்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இப்படிச் சொல்லப்படுவதை ஒரேயடியாகத் தவறான கருத்து என ஒதுக்க முடியாது. மாறாக, இதன் பின்னணியில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உடற்பயிற்சிகள் செய்யும்போதும், ஸ்ட்ரெஸ் அளவு கூடுதலாகத்தான் இருக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அந்த நிலையில் மாரடைப்புக்கான ரிஸ்க் ஓரளவு இருக்கும்.
இது ஏற்கெனவே இதயத்தில் பாதிப்புகள் உள்ளவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர, எல்லோருக்கும் அல்ல. வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் சரியல்ல. ஏற்கெனவே இதயத்தின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பவர்களுக்கு, ஸ்ட்ரெஸ் ஆகும்போது அந்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு.

எனவே, முடிந்தவரை ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முயலலாம். மாரடைப்பு ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகளான புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்ப்பதும், அவ்வப்போது பரிசோதனைகள் செய்து பார்ப்பதும், நோய்க்கு முறையான சிகிச்சை எடுப்பதும் மிக முக்கியம்.
முறையான தூக்கத்தின் அவசியத்தை இந்தத் தலைமுறையினர் உணர்வதே இல்லை. நள்ளிரவு வரையிலோ, விடியும்வரையிலோ விழித்திருந்துவிட்டு, பிறகு ஏழெட்டு மணி நேரம் தூங்கினால் போதும் என நினைக்கிறார்கள். இது தவறு. சரியான நேரத்துக்குச் சரியான அளவு தூங்க வேண்டியது அவசியம்.
இரவில் தாமதமாகத் தூங்குவது தவிர்க்கப்பட வேண்டும். வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


