ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எம்.கருப்பையா, வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ. கருப்பையா, “வாடிவாசலில் இறங்கி ஜல்லிக்கட்டு விளையாடுவதால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது” எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ. கருப்பையாவின் பேச்சு குறித்து மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் கூறுகையில், "சர்க்கரை ஆலை தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் முன்வைத்த கருத்து சரியானதாக இருக்கலாம். ஆனால், அதற்காக தமிழர்களின் பாரம்பர்யத்தையும் வீர விளையாட்டையும் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டை, இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிகிறது என்ற கருத்துடன் இணைத்துப் பேசியது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வார்த்தையை எம்.எல்.ஏ. தவிர்த்திருக்கலாம். ஜல்லிக்கட்டின் மீது ஆர்வம் கொண்ட ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களின் மனதை இந்தக் கருத்து புண்படுத்தியுள்ளது" என தெரிவித்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இது குறித்து  எம்.எல்.ஏ. வி.எம்.கருப்பையா பேசிய போது, “நானே ஒரு மாடுபிடி வீரன். ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவன். அப்படியிருக்க நான் ஜல்லிக்கட்டைக் கொச்சைப்படுத்திப் பேசுவேனா? ஜல்லிக்கட்டைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு கலாசாரத்தை விளையாட்டு மைதானம் என்ற பெயரில் வணிக நோக்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடக் கூடாது என்பதே எனது கருத்து. 

பள்ளி மாணவர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன். 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது, அன்றைய மாவட்ட ஆட்சியர் சகாயம் உள்ளிட்டோரின் உதவியுடன் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டு, 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

கருப்பையா
கருப்பையா

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் இல்லை. எதிர்கால மாணவர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழர்களின் பாரம்பர்யம் கட்டிக் காக்கப்பட வேண்டும்; இளைஞர் சமுதாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒருபுறம், ஜல்லிக்கட்டின் பாரம்பர்யத்தைப் பாதுகாக்க வேண்டும் என மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே எனது கருத்தைத் தெரிவித்தேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.