சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடி மாப்பிளையூரணியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின் மகன் நிரஞ்சன். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி விளாத்திகுளம் மீனாட்சிபுரத்தில் அடிதடி பிரச்னை தொடர்பாக  விளாத்திகுளம் காவல் நிலையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிரஞ்சனைக் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 5-ந்தேதி இரவு கிளைச் சிறையின் சமையலறைப் பகுதி வழியாக மேலே ஏறி வெளியே குதித்து தப்பி ஓடினார்.

நிரஞ்சன்

மறுநாள் 6-ந்தேதி காதலியைச் சந்திப்பதற்காக மீனாட்சிபுரம் காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்த நிரஞ்சனை போலீஸார் கைது செய்து தூத்துக்குடி மாவட்டச் சிறையான பேரூரணி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், நிரஞ்சனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீஸார் நிரஞ்சனை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது நிரஞ்சன் தப்பி ஓடியுள்ளார்.

விளாத்திகுளம் காவல் நிலையம்
விளாத்திகுளம் காவல் நிலையம்

ஏற்கனவே ஒருமுறை கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பித்து போலீஸார் நிரஞ்சனைக் கைது செய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக போலீஸாரிடம் இருந்து தப்பி உள்ளார்.

பின்னர், போலீஸாரின் தீவிர தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் அலட்சியம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அதே நேரத்தில் இரண்டாவது முறையாக கைதி தப்பியோடினாரா? அல்லது தப்ப விட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.