நேபாள வெள்ளம்: ஒரே ஒரு போன் கால்; 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமையாசிரியர்!
‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழிக்கான உதாரணமாகி இருக்கிறார் ராஜேந்திர ததாபி.
கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோர சம்பவத்தில், 1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைத் தனது சமயோசித புத்தியால் காப்பாற்றி இருக்கிறார் ராஜேந்திர ததாபி.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திர ததாபி.
இந்தப் பள்ளிக்கு அருகே இருக்கும் திரிசூலி ஆற்றுப் பகுதியிலும் கடந்த 26-ம் தேதி கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த வெள்ளப்பெருக்கு குறித்து ததாபிக்கு அவருடைய நண்பர் கூறியிருக்கிறார்.
உடனே, ததாபி பள்ளி மணியை அடித்து, பள்ளியில் இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் உயரமான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.
அடுத்ததாக, பள்ளிப் பேருந்துகளின் டிரைவர்களுக்குப் போன் செய்து, மாணவர்களை மீண்டும் அவர்களுடைய வீட்டிலேயே இறக்கிவிடக் கூறியிருக்கிறார்.
அந்த நேரத்தில், ஒரேயொரு பள்ளிப் பேருந்து மட்டும் ஆற்றுப் பாலத்தைக் கடந்துகொண்டிருந்திருக்கிறது.
உடனே, அந்தப் பேருந்தையும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லச் சொல்லி எச்சரித்திருக்கிறார்.
நல்ல வேளையாக, அந்தப் பேருந்து பாலத்திலிருந்து கடந்த சில நிமிடங்களிலேயே, அந்தப் பாலம் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
அடுத்து கொஞ்ச நிமிடங்களில், மூன்று அடுக்குக் கட்டடமான அந்தப் பள்ளியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், ராஜேந்திர ததாபி என்கிற ஒற்றை மனிதரின் சாதுர்யத்தால், 1,643 மாணவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தற்போது பத்திரமாக உள்ளனர்.
சல்யூட் ராஜேந்திர ததாபி!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


