வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று காலை சென்றபோது, துர்நாற்றம் வீசியதால் கிணற்றின் அருகில் சென்று எட்டிப் பார்த்திருக்கிறார். அப்போது, 2 சடலங்கள் அழுகிய நிலையில் மிதந்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். தகவலறிந்ததும், கிராம மக்கள் பெரும்பாலானோர் அங்கு திரண்டு கிணற்றைச் சுற்றிலும் கூடினர். உடனடியாக ஆலங்காயம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்களுடன் போலீஸார் விரைந்து சென்று கிணற்றில் மிதந்துக் கொண்டிருந்த 2 சடலங்களையும் மீட்டு மேலே கொண்டுவந்தனர்.

சிறுவர்களின் பிணம்

சடலங்களின் உடலமைப்பை பார்க்கும்போது, 15 வயது மற்றும் 9 வயதே ஆன சிறுவர்களின் உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற எந்தவொரு விபரமும் உடனடியாக தெரியவரவில்லை. வாணியம்பாடி டி.எஸ்.பி மகாலட்சுமியும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், அருகிலுள்ள மாணவர் விடுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் புறங்களில் இருந்து சிறுவர்கள் யாரேனும் மாயமாகியுள்ளனரா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மீட்கப்பட்ட சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி, கிராமத்தையே அலறவிட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.