நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய 97 வயது மூதாட்டி - மீட்புப் பணியின் நம்பிக்கை முகமான குணா மாயா!

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குணா மாயா போஹாரா தங்கியிருந்த முதியோர் பராமரிப்பு இல்லம் இடிந்து விழுந்தது. 97 வயதான குணா மாயா அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க நேபாள போலீஸாரும் ராணுவத்தினரும் களமிறங்கினர்.

வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பால் அந்தப் பகுதியே சேதமடைந்திருந்தது. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குணா மாயாவை மீட்பது சவாலாக இருந்தது. இதற்கிடையே, காத்மாண்டுவிலிருந்து அவரது உறவினர் தீபக் போஹாராவும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் இணைந்தார்.

குணா மாயா

இடிபாடுகளுக்குள் தொடர்ந்து தேடிய நிலையில், குணா மாயா இன்னும் உயிருடன் இருப்பது தெரியவந்தது. சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மண் படிந்த ஆடைகளுடன் எக்ஸ்கவேட்டரின் வாளியில் அமர்ந்தபடி அவர் வெளியே கொண்டுவரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

சேற்றில் தோய்ந்த உடையுடன், சோர்ந்த முகத்துடன் அவர் அமர்ந்திருந்த காட்சி பலரையும் நெகிழச் செய்தது. அந்தத் தருணத்தைப் பார்த்த தீபக் போஹாரா, “போரில் வெற்றி பெற்று திரும்பிய ஒரு வீரரைப் போல இருந்தார்” என்று கூறியுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குணா மாயாவால், இடிபாடுகளுக்குள் எப்படி உயிருடன் இருந்தார் என்பதை விளக்க முடியவில்லை.

இந்த வெள்ளம் நேபாளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 676 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல குடும்பங்கள் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், குணா மாயாவின் மீட்பு ஒரு சிறிய நம்பிக்கையைத் தருகிறது. வெள்ளத்தின் அழிவுக்கு நடுவே, நான்கு மணி நேரத் தேடலுக்குப் பிறகு கிடைத்த அந்த ஓர் உயிர், மீட்புப் பணியில் நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.