விளாச்சேரி டு அமெரிக்கா... களிமண்ணில் உருவாகும் ஒரு கிராமத்தின் கனவு!

பண்டிகை காலங்களில் வீடுகளையும் கொலு படிகளையும் அலங்கரிக்கும் பொம்மைகளுக்குப் பின்னால் பல குடும்பங்களின் உழைப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட பாரம்பர்ய பொம்மைத் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற ஊராகத் திகழ்கிறது மதுரை மாநகரில் உள்ள விளாச்சேரி கிராமம். இங்கு களிமண் பொம்மைகள் மட்டுமல்லாமல், எடை குறைவான பேப்பர் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பொம்மைகள் செல்கின்றன.

களிமண் பொம்மையை அச்சில் பதித்து எடுத்த பிறகு அது உடனடியாக விற்பனைக்குத் தயாராகிவிடுவதில்லை. ஒரு பொம்மை முழுமையாகத் தயாராகி கைகளுக்குக் கிடைக்க குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகிறது. அதன் பிறகு பெயின்டிங் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுவதால், மொத்தமாக சுமார் 20 நாட்கள் வரை ஆகிறது. பேப்பர் பொம்மைகளைப் பொறுத்தவரை சுமார் 10 நாட்களில் தயாரித்து வழங்க முடிகிறது. குறிப்பாக பேப்பர் பொம்மைகளின் தயாரிப்பில் வெயிலும் காலநிலையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

விளாச்சேரியின் பொம்மைத் தொழில் ஒரு கிராமத்தின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. சுமார் 200 குடும்பங்கள் இந்தத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 400 பேர் வரை இதில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகப் பெண்கள் இந்தத் தொழிலின் பல்வேறு கட்டங்களில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

இங்கு தசாவதாரம், ராவணன், ராமாயணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட செட்டுகள், கல்யாண செட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கொலு வைப்பவர்களின் தேவைக்கேற்ப பழைய கதைகள் மற்றும் இதிகாசக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட செட்களும் உருவாக்கப்படுகின்றன.

வெளிநாடுகளுக்கு பொம்மைகளை அனுப்பும்போது எடை முக்கியமானதாக இருப்பதால், லைட்வெயிட் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பொம்மைகள் உடையாமல், சேதமடையாமல் சென்று சேருவதற்காக Bubble பேப்பர் உள்ளிட்ட பாதுகாப்பான பேக்கிங் முறைகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட கூரியர் மூலம் அனுப்புகின்றனர். இதன் மூலம் விளாச்சேரியில் உருவாகும் பொம்மைகள் கடல் கடந்தும் சென்று கொண்டிருக்கின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தற்போது கிருஷ்ணர் பொம்மைகளுக்கான தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேவையான பொம்மைகளை முன்கூட்டியே தயாரித்து பேக் செய்து வைத்துள்ள நிலையில், ஆர்டர்கள் வர வர அவற்றை அனுப்புவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ண ஜெயந்தி முடிந்ததும் விநாயகர் சதுர்த்தி, அதன் பிறகு நவராத்திரி கொலு என அடுத்தடுத்த பண்டிகைகளுக்கான பணிகள் தொடங்கிவிடுகின்றன. கொலு சீசனில் அதிகமான தேவை இருப்பதால் இரவு பகலாக வேலை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அதன் பிறகு கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் பணி தொடர்கிறது.

உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் சேர்த்து வெளியூர்களில் உள்ள வழக்கமான வாடிக்கையாளர்களும் தொலைபேசி மூலம் ஆர்டர்களை வழங்குகின்றனர். ஒரு பண்டிகைக்கான வேலை முடிவதற்குள் அடுத்த பண்டிகைக்கான வேலை தொடங்கிவிடும் அளவுக்கு இந்தத் தொழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

வீடுகளின் கொலு படிகளில் அழகாக அமரப்போகும் ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னாலும் பல நாள்கள் உழைக்கும் கைகளும், ஒரு கிராமத்தின் வாழ்வாதாரமும் இருக்கிறது. விளாச்சேரியில் உருவாகும் இந்தப் பொம்மைகள் பண்டிகைகளை மட்டும் அலங்கரிப்பதில்லை; தலைமுறைகள் கடந்து வரும் ஒரு பாரம்பர்யத் தொழிலையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.