நேபாள ராணுவம்தான் அவர்களை மீட்டெடுத்தது..!- டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களைச் சந்தித்த ஜெய்சங்கர்

நேபாளத்தில் இருந்து 21 தமிழர்கள் டெல்லி வந்தடைந்திருக்கின்றனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் குழு மட்டுமின்றி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் சந்தித்திருக்கின்றனர்.

அச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், " கைலாஷ் மானசரோவருக்கு ஆன்மிகப் பயணம் சென்று, வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு மீட்கப்பட்டவர்களை நான் இப்போதுதான் சந்தித்தேன். நேபாள ராணுவம்தான் அவர்களை மீட்டெடுத்தது. அதன் பிறகு, அவர்கள் தாயகம் திரும்புவதற்கு நமது தூதரகம் ஏற்பாடு செய்தது. அவர்கள் பாதுகாப்பையும், அனுபவங்களையும் கேட்டறிய நான் அவர்களைச் சந்திக்க வந்தேன்.

Nepal Flood

அங்கு இருக்கும் அனைத்து இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் நாங்கள் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம். 315-க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இப்போது வரை இந்த 21 பேர் கொண்ட குழு உட்பட சுமார் 85 இந்தியர்கள் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கடினமான இடத்திலிருந்து தங்களை மீட்டெடுத்த நேபாள ராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர். நேபாள மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஆதரவு அளிப்பதில் தீவிரமாக இருக்கிறோம். இன்று காலைகூட நான் நேபாள வெளியுறவு அமைச்சருடன் பேசினேன். அவர்களுக்கு தேவையானப் பல உதவிகளை வழங்க முன்வந்துள்ளோம்.

ஜெய்சங்கர் - நயினார் நாகேந்திரன்
ஜெய்சங்கர் - நயினார் நாகேந்திரன்

இங்கிருந்து சில மருத்துவக் குழுக்கள் அங்கு செல்லவிருக்கின்றன. அவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தேவைப்பட்டால், அதையும் அனுப்புவோம். இரண்டு விமானங்கள் நிறைய நிவாரணப் பொருள்கள் ஏற்கெனவே சென்றுவிட்டன, மூன்றாவது விமானம் இன்று புறப்படும்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.