பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், "என்னை வெற்றி பெறவைத்த என் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வெற்றி என்பது மக்களின் வெற்றி.
இந்த வாய்ப்பு என்பது மக்கள் தளபதி மீது கொண்டுள்ள மாபெரும் நம்பிக்கை. பேரவை தலைவர் அவர்களே, நீங்கள் புரட்சி தலைவரின் ரசிகர் என்று தெரியும்.
ஒரே ஒரு பாடல் மட்டும் பாடி கொள்கிறேன். இந்தப் பாடல் எதிர்க்கட்சித் தலைவருக்கு பிடிக்கும் என்று தெரியும். "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... அதை நான் நாடறிய சொல்லட்டுமா? இன்று... தெரு தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு. ஊரார் தெரிந்துக்கொள்ள படம் பிடிப்பார் சுயநலமுண்டு..." அப்போதே ரீல்ஸைப் பரப்பி இருக்கிறார்கள் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடியிருக்கிறார்" என்று அமைச்சர் சொன்னதும் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே எழுந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "புரட்சித் தலைவர் பாடலைத்தான் பாடினாரே தவிர வேறு எந்த அர்த்தத்துடனும் எங்கள் அமைச்சர் பேசவில்லை. ரசிகராகப் பாடியிருக்கிறார். அதனைக் குற்றமாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்றார்.
தொடர்ந்து, "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சொன்னார்.

பிறகு எழுந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் நேற்றே பதிலுரையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுதான் ஆரம்பித்திருக்கிறார். இதில் பாட்டு வேறு பாடுகிறார்.
சாட்சிக்கு என்னை அழைத்திருக்கிறார். அதனால் நாங்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கு எங்களைப் பேச நீங்கள் அனுமதிக்க வேண்டும் பேரவை தலைவர் அவர்களே" என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


