மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன் - கர்நாடக முதல்வர்
கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது.
இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ணீர் வராது என்று தமிழ்நாடு குரல் எழுப்புகிறது.
ஆனால், மேகதாது அணை கட்டினால், அது தமிழ்நாட்டிற்குத்தான் உதவும் என்று ‘இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் நேற்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
“மேகதாது திட்டம் கர்நாடகாவிற்கானது அல்ல. அது தமிழ்நாடு மக்கள் நலனுக்கானது. அதில் சேமிக்கப்படும் 95% நீர் தமிழ்நாட்டிற்குத்தான் பயன்படும்.
மேகதாது நீரைக் கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் பாசனத்திற்கு ஒரு சொட்டுக் கூட பயன்படுத்த முடியாது.
காவிரியிலிருந்து பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
முக்கியமான காலங்களில் அளவுக்கு அதிகமாக ஓடும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்பதால், இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு வாழ்வாதாரமானது.
அவர்களுக்கு தண்ணீரைத் திறந்து விடுவதற்காகவே அதை நாம் அங்கு சேமித்து வைக்க வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நம்மிடம் உள்ளது.
‘இது உங்கள் நிலத்தில் உள்ளது, நீங்களே இதைச் செய்கிறீர்கள்’ என்று உச்ச நீதிமன்றம் மிகக் கனிவோடு அங்கீகரித்துள்ளது.
இயல்பான மழைக்காலங்களில் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விடுவது நமது கடமை, அதற்கு நாம் கட்டுப்பட்டவர்கள். உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவிட்டிருக்கிறதோ, அந்த உறுதியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன்.
தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில், நான் இந்த அணை தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும், பெங்களூருவுக்கு குடிநீர் வழங்கவும் மட்டுமே அமைக்கப்படுகிறது என்று தெளிவாக பேசினேன்.
அணை இல்லாவிட்டாலும் கூட எங்களால் நீரெடுக்க முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஏனெனில் அதற்கு நமக்கு உரிமை உண்டு. ஆனால் அருகில் வேறு பொருத்தமான இடம் எதுவும் இல்லை. அந்த வகையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.”
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

