நேபாளம்: ``தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் - சொற்பொழிவாளர் மங்கையற்கரசி உருக்கம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``கடந்த 20-ம் தேதி நாங்கள் அனைவரும் Kerung Border வழியாக நேபாளத்திற்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கைலை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டாம் நாள் பரிக்கிரமாவை நிறைவு செய்து திரும்பிய போதுதான், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலச்சரிவு மற்றும் பேரிடர் சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சொற்பொழிவாளர் மங்கையற்கரசி

அதைக் கேட்டதிலிருந்து மிகுந்த மனவேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். இந்தப் பேரிடரில் பல்லாயிரக்கணக்கான நேபாள மக்களும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மற்றும் தமிழக யாத்திரிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களோடு இந்த ஆன்மீகச் சுற்றுலாவில் 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 150 பேர் பயணம் மேற்கொண்டுள்ளோம். சிவபெருமானின் அருளால் நாங்கள் அனைவரும் தற்போது சாகா (Saga) என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இங்கிருந்து நாங்கள் அனைவரும் தாய்நாடு திரும்புவதற்கான வழிகள் மற்றும் அனுமதிகள் குறித்து இந்திய, நேபாள மற்றும் சீன அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். எந்த வழியாக அனுமதி கிடைக்கிறதோ, அதன் வழியே பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேபாளம் வெள்ளப்பெருக்கு
நேபாளம் வெள்ளப்பெருக்கு

நிலச்சரிவில் சிக்கி இதுவரை தகவல் தெரியாமல் இருப்பவர்களை மீட்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும் அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. நாங்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அனைவரும் விரைவில் தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.