Once More: இப்போ வில்லனாக நடிக்க யாரும் கூப்பிடுறது இல்ல - பகிரும் அர்ஜுன் தாஸ்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்திருக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்திற்காக அர்ஜுன் தாஸ் சினிமா விகடன் சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அதிதி ஷங்கர் - அர்ஜுன் தாஸ்

நம்மிடையே பேசுகையில், "உதவி இயக்குநராக இருக்கும் என்னுடைய நண்பர் சூர்யநாராயணன் மூலமாகத்தான் எனக்கு ஒன்ஸ் மோர் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அறிமுகமானார்.

எனக்காக அவர் கதை வைத்திருப்பதாகவும் சொன்னார். ஆனால், அந்தக் கதையை என்கிட்ட அவர் நரேட் பண்ண வரவே இல்லை.

அதைப் பற்றி என் நண்பர் சூர்யநாராயணன்கிட்டயும் அப்டேட் கேட்பேன். பிறகு, பிஜாய் நம்பியார் இயக்கத்தில் போர் படத்தில் நடித்தேன். அந்தப் படத்துக்கு விக்னேஷ் ஸ்ரீகாந்த்தான் தமிழ் வசனம் எழுதினார். அப்போதும் அந்தக் கதை பத்தி நான் அப்டேட் கேட்பேன்.

ஆனால், அவர் இந்தப் படத்தை முழுமையாக முடித்துவிட்டு நரேட் பண்ணுவதாகச் சொன்னார். அங்கிருந்துதான் ஒன்ஸ் மோர் பயணம் தொடங்கியது" என்றவர் அவருக்குப் பிடித்த காதல் படங்களைப் பட்டியலிட்டார்.

அவர், "சில்லுனு ஒரு காதல், மௌன ராகம், சத்யா, ரோஜா, பாம்பே, தில் சே, வாரணம் ஆயிரம்னு நிறைய லிஸ்ட் இருக்கே" எனப் பகிர்ந்துகொண்டார்.

Arjun Das Interview - Once More
Arjun Das Interview - Once More

தொடர்ந்து பேசியவர், "கைதி படத்துக்குப் பிறகு எனக்குத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள்தான் வந்தன. அந்தகாரம் படத்துக்குப் பிறகு தொடர்ந்து ஹாரர் கதைகளா வந்துச்சு.

அப்புறம், மாஸ்டர்ல நடிச்சப் பிறகு தொடர்ந்து ரொமாண்டிக் கதைகள்தான் வந்துச்சு. அது ஏன்னு தெரியல. போர், ஒன்ஸ் மோர் மாதிரியான படங்கள் அப்படித்தான் நடந்தன.

ஆனால், இந்தச் சமயத்தில் இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு நன்றி சொல்லணும். புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜியில லோனர்ஸ் என்கிற கதையில என்னை வேறொரு வடிவத்துல காமிச்சிருந்தாங்க.

இப்போ, கான் சிட்டி படத்துக்குப் பிறகு 8 அப்பா கதைகள்தான் வந்திருக்கு. இப்போ வில்லன் கதாபாத்திரத்திற்கு யாரும் கூப்பிடுறது இல்லை. கூப்பிட்டா, நல்ல கதாபாத்திரங்களை நிச்சயம் பண்ணுவேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.