``சட்டமன்றம், காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடமல்ல - சிபிஐ வீரபாண்டியன்
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், பதுக்கலைத் தடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், ``நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டெடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவித்துகொள்கிறோம். இந்தியாவில் சர்க்கரை மற்றும் அரிசி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளபோதிலும், அவை பெரு முதலாளிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களால் பதுக்கப்படுகிறது.
செயற்கையாக உருவாக்கப்படும் இந்த பதுக்கலே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். இதற்கு ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். பதுக்கலை வெளிக்கொண்டு வருவதோடு, மாநில அரசும் தன் பங்கிற்கு விலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகமலையில் வாழும் தொல்குடி பழங்குடி மக்களை எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்தக் கூடாது. நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தாலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்புக்குரியது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இயற்கைச் சூழலையும் அழித்து புதிய திட்டங்களைக் கொண்டு வரக் கூடாது. மேலும், பரந்தூர் திட்டத்திற்காக விவசாயிகளிடம் பெறப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். விவசாய நிலங்களையும் இயற்கைச் சூழலையும் பாழ்படுத்தாமல், மக்களின் வாழ்விடம் பாதிக்கப்படாத மாற்று இடங்களைக் கண்டறிந்து மட்டுமே நவீனத் தொழில் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வலியுறுத்துகிறோம்.
தற்போது டெல்டா பகுதியில் வறுமை மற்றும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருள்களைக் கட்டணமின்றி முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும். மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டக் கூடாது. காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மதித்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் உரிய தண்ணீரைத் திறக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
இடதுசாரிகள் குறித்து கணக்கெடுக்க கூறியது தொடர்பாக முதல்வருக்கு சிபிஎம் கடிதம் எழுதியிருக்கிறது. அதே நிலைபாட்டில்தான் நாங்களும் இருக்கிறோம். பிரிட்டிஷ்காரர்களின் காலத்து நடைமுறைகளைக் கையாள்வது ஏற்புடையதல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை, ஜனநாயகம், சுதந்திரம், சமூக நீதி போன்ற அனைத்துக் கூறுகளுமே இடதுசாரி சிந்தனையின் வெளிப்பாடுகள்தான். விடுதலை, சமூக அறிவியல் மற்றும் நாட்டின் எதிர்காலம் ஆகியவை இடதுசாரித்துவத்திலேயே அமைந்திருக்கின்றன.

சட்டமன்றமும் நாடாளுமன்றமும் மக்களுக்கான உரையாடல் அரங்கங்கள். ஜனநாயக முறையில் சட்டங்களை இயற்றும் புனிதமான இடங்கள். அவை அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்து பழிவாங்கும் இடங்களோ அல்லது கூச்சலிட்டுப் பொருள்களைக் கூவி விற்கும் கடைகளோ அல்ல. மக்கள் எதிர்கொள்ளும் அத்தியாவசியப் பிரச்னைகளை விவாதித்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் களமாக அவை செயல்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

