``உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது - விசிக திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் மற்றும் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்திருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கர்நாடகா சென்றிருந்த விசிக தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அன்றைய முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த இடம்...

அப்போது, பெரும்பாலான நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தொடங்கிவிட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எனினும், ஏகனாபுரம் பகுதி மக்கள் தங்கள் விளைநிலங்களைத் தவிர்த்து, அருகில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலியிடங்களைப் பயன்படுத்துமாறு முன்வைத்த மாற்று யோசனையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

தற்போது பரந்தூர் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டு, புதிய விமான நிலையத்திற்கான வேறு இடத்தை தேர்வு செய்வோம் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், புதிய இடத்தை தேர்வு செய்யும்போது சட்டப்படி அங்குள்ள மக்களின் கருத்தறிந்து அவர்களின் இசைவைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும். விமான நிலையம், துறைமுகம், ரயில்வே போன்ற எந்தவொரு பெருந்திட்டத்தைக் கொண்டு வந்தாலும், நிலங்களைக் கையகப்படுத்தும் போது நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படாதவாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

புதிய அரசு பொறுப்பேற்று 100 நாள்களே ஆகியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு புதிய அரசும் தனது திட்டங்களையும் வாக்குறுதிகளையும் முழுமையாகச் செயல்படுத்தக் குறைந்தபட்ச காலமாவது தேவைப்படும் என்பதால், உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை என்று விவாதிக்க முடியாது. ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, அது தொடர்பாக, பொதுவெளியில் விமர்சிப்பதை விட அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கோரிக்கைகளைக் கொண்டு சென்று, வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தும் கடமையை தொடர்ந்து செய்து வருகிறது." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.