திருப்பத்தூர்: பலூன் ஊதும்போது தொண்டையில் சிக்கி விபரீதம்; 6 வயது சிறுவன் பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரம் செய்யும் தம்பதி குமார் - சத்யா. இவர்களுக்கு 6 வயதில் சோம்நாத், சேஸ்நாத் என்று இரட்டையர் உட்பட மூன்று மகன்களும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்றைய தினம், பெற்றோர் வழக்கம்போல துணி வியாபாரத்துக்காக பர்கூர் சென்றிருக்கின்றனர்.

வீட்டில் இருந்த குழந்தைகள் பலூன் ஊதி விளையாடியிருக்கிறார்கள். அப்போது, இரட்டையரில் ஒருவரான சோம்நாத் ஊதிய பலூன் வெடித்து, சோம்நாத்தின் தொண்டையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த சிறுவன் சிறிதுநேரத்திலேயே மூச்சுப் பேச்சின்றி மயக்கமடைந்திருக்கிறான்.

அக்கம், பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் சிறுவனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் சோம்நாத் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர்.

பலியான சிறுவன்

மருத்துவமனையில் தங்களது மகனை பிணமாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த நாட்றம்பள்ளி போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`குழந்தைகள் விளையாடும் பொருள்களில், மூச்சுத் திணறலால் ஏற்படும் மரணங்களுக்கு பலூன்களே முதன்மைக் காரணம். தொண்டையில் பலூன் அல்லது அதன் உடைந்த துண்டுகள் சிக்கினால், அது மிகவும் ஆபத்தான, அவசர மருத்துவச் சூழலை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளுக்குப் பலூன்களை வாயில் வைத்து ஊதக் கற்றுத் தரக்கூடாது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.