புதுச்சேரி பட்ஜெட்: 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு `டேப்; முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கு ரூ.14,300 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.

சட்டப்பேரவையில் அவர் வாசித்த பட்ஜெட் உரையில், `தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலைதேடுவோர் மற்றும் வேலை அளிப்போரை டிஜிட்டல் முறையில் இணைக்க பொது மையம் அமைக்கப்படும். உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த முதல்வர் உள்ளாட்சி வளர்ச்சி பாதை திட்டம் அறிமுகமாகிறது.

பொதுமக்கள், எம்.எல்.ஏ-க்கள்  பரிந்துரை அடிப்படையில் ரூ.1,131 கோடி மதிப்பீட்டில் 2,282 பணிகள் கொண்ட விரிவான ஐந்தாண்டு திட்டம் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் படிப்படியாக தொகுதிவாரியாக செயல்படுத்தப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன் சாலையோர உணவு மையம் அமைக்கப்படும்.

புதுச்சேரி அரசு

மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவசமாக டேப் (கையடக்க கணினி) இந்த நிதியாண்டு முதல் தரப்படும். 16,250 பேர் பயன்பெறும் இந்தத்  திட்டத்துக்கு ரூ.16.25 கோடி கூடுதல் செலவு ஏற்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி தரப்படும்.

அதற்கு அரசுக்கு கூடுதலாக ரூ. 6.46 கோடி செலவு ஏற்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.35,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவை மகளின் திருமண நிதியுதவி ரூ.40,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக நடப்பு நிதியாண்டில் உயர்த்தி தரப்படும். புதுச்சேரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.3,000 மதிப்புள்ள பரிசுத் தொகுப்பு தரப்படும். பழைய துறைமுகத்தில் பயணியர் முனையம் அமைக்கப்படும். கப்பல் பயணிகளுக்கான வசதி ஏற்படுத்தப்படும்.

கடல்வழி நீர்வழி தயாரிக்கப்படும். காரைக்காலில் ரூ.80 கோடியில் நவீன மாவட்டச் சிறைச்சாலை அமைக்கப்படும். புதுச்சேரியில் 1,000 டி.டி.எஸ் மேல் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ள இடத்தில் 50 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், ஏரிகளைச் சீரமைக்கவும் ரூ.497 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் 125 நாள் வேலைத் திட்டத்தில் 20 லட்சம் வேலை நாட்கள் உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். சிறந்த அரசப் பள்ளிகளில் அதிநவீன நூலக வசதி ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் விரிவான கல்வி தொழில்நுட்ப திட்டம் அறிமுகமாகும். இதில் செயற்கை நுண்ணறிவு கற்றல் தளம், மெய்நிகர் ஆய்வகம் அமையும்.

அனைத்து அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எரிப்பான் அமைக்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக நடமாடும் மருத்துவ சேவை அறிமுகமாகும். நீண்டகால நோய் பாதிக்கப்பட்டோரை பராமரிக்க தன்னார்வலர்கள் மூலம் நோய் தணிப்புப் பேணல் திட்டம் அறிமுகமாகிறது. அரசு தனியார் பங்களிப்புடன் வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். அவை புதுச்சேரியில் இருந்து சென்னை, பெங்களூர் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் இயக்கப்படும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.