``நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி - மரிய வில்சன் பேச்சுக்கு அன்பில் மகேஷ் ரியாக்ஷன் என்ன?

இன்று காலை நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ``நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்." எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இது தொடர்பாக விவாதம் எழுந்தது. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``சட்டமன்றத்தில் உயர்கல்வித் துறை தொடர்பான விவாதத்தின் போது, நிதியமைச்சர் திடீரெனச் சம்பந்தமில்லாமல் `நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி, எவிடன்ஸ் என்னிடம் உள்ளது எனக் கூறி என் மீது அவதூறு பரப்பியிருக்கிறார்.

நிதியமைச்சர் மரியவில்சன்

பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும், சட்டமன்றத்தின் உள்ளே பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் சுமத்தியது மிகப்பெரிய தவறு. அதையும் கடந்து `லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி என்று கூறிய அமைச்சரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டும். லஞ்சம் வாங்குவது எப்படி குற்றமோ கொடுப்பதும் குற்றம்தானே...

தற்போது ஆளுங்கட்சி கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகள் நிலவி வருகின்றன. 100 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு கூறிய வழக்கறிஞர் கட்சியிலிருந்து நீக்கம், எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டுகள், ஒப்பந்ததாரரால் மிரட்டப்பட்ட அமைச்சர் விவகாரம், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, மற்றும் இடதுசாரிகள், காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்கள் எனப் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஊடகங்களில் விவாதிக்கப்படும் இந்த முக்கியச் சிக்கல்களைத் திசைதிருப்புவதற்காகவே சட்டமன்றத்தில் இத்தகைய திட்டமிட்ட நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சம்பந்தமே இல்லாத ஒரு குற்றச்சாட்டைக் கல்லூரி நடத்தி வரும் ஒரு அமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் எவ்வாறு அனுமதித்தார் என்பது தெரியவில்லை. அவை முன்னவரும் இது குறித்துப் பேசாதது விசித்திரமாக உள்ளது. எனவே, அவதூறாகப் பேசப்பட்ட அந்த உரையாடல்களை உடனடியாகச் சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இது குறித்து உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்றும் சட்டப்பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.