வாட்டர் கேன் போட்டிருக்கேன்; காஃபி டே-ல வேலை பார்த்திருக்கேன் - மொத ராத்திரி ரிஷிகாந்த்
நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் மொத ராத்திரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஜூனியர் ஆர்டிஸ்ட், சிறு சிறு வேடங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனப் படிப்படியாக முன்னேறி இன்று ஹீரோவாகியிருக்கிறார் ரிஷிகாந்த். அவருடைய சினிமா பயணம் தொடர்பாக நம்முடைய சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
ரிஷிகாந்த், "ஒரு கட்டத்துல எல்லாமே முடிஞ்சிடுச்சுனு நினைச்சு எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிடலாம்னு இருந்தேன். அப்போதான் மொத ராத்திரி வாய்ப்புக் கிடைச்சது. ஒவ்வொரு முறையும் இப்படியான விஷயங்கள்தான் தோணும்.
ஆனா, ஒவ்வொரு முறையும் எதை முடிவுனு நினைக்கிறேனோ, அதுதான் எனக்கு தொடக்கமாகவும் மாறியிருக்கு. சினிமாவுக்குள்ள வர்றதுக்கு முயற்சி பண்ற சமயத்துல நிறைய வேலைகள் பார்த்திருக்கேன்.
ஆனா, அந்த வேலைக்கெல்லாம் அதிகபட்சமாக ஒரு வாரம்தான் போவேன். காஃபி டே-ல வேலை பார்த்திருக்கேன். ஃப்ரண்டு ஒருத்தர் தண்ணீர் கேன் போடுற பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு.

அவர் மூலமா, வடபழனி, வளசரவாக்கம் ஏரியாவுல தண்ணீர் கேன் போட்டுட்டு இருந்தேன். அப்புறமா, சினிமாவுல ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சேன். நிறைய படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சிருக்கேன். அப்போ என்னுடைய முகம் தெரியக்கூடாதுனு கடைசில போய் நின்னுடுவேன்.
ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்கும்போது சினிமாவுலதான் இருக்கோம்ங்கிற எண்ணம் வரும். தினமும் 300 ரூபாய் பேட்டா சம்பளம் கிடைச்சிடும். அங்கேயே எனக்கு சாப்பாடும் கிடைச்சிடும்.
பிறகுதான் சிலர், நீ ஏன் இதெல்லாம் பண்ற, நீ லீட் மெட்டீரியல். அதுக்கான முயற்சிகளைப் பாருனு அட்வைஸ் பண்ணினாங்க. அங்கிருந்துதான் எனக்கான விஷயங்களைத் தேடத் தொடங்கினேன். இவையெல்லாம்தான் என் கரியரை நோக்கி நகர்வதற்கான படிகள்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


