TV Update: மீண்டும் குஷ்பு நடத்தும் ஜாக்பாட்; டாக் ஷோ மூலம் என்ட்ரி தரும் சேரன்!

ஜெயா டிவி-க்கு வயசு 28!

28வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஜெயா டிவி. அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவிதான் ஆரம்ப காலத்தில் திமுகவின் அதிகாரபூர்வ சேனல் போல செயல்பட்டு வந்தது.

இதன் ரீச் அதிகமாக இருந்தது என்பதாலேயே சன் டிவிக்கு போட்டியாக ஒரு சேனலைத் தொடங்க நினைத்த ஜெயலலிதா, ஜெ ஜெ டிவியைத் தொடங்கினார். ஆனால் லைசென்ஸ் உள்ளிட்ட சில விவகாரங்களில் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து ஜெ ஜெ டிவி மூடப்பட்டு பிறகு ஜெயா டிவி என்கிற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.

ஆரம்பத்திலிருந்தே இந்த தொலைக்காட்சியின் நிர்வாகம் முழுக்க சசிகலா குடும்பத்தினரின் கையில் இருந்ததால் அதிமுகவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் சேனலும் அதிமுகவின் அதிகாரபூர்வ சேனல் என்கிற அடையாளத்தை இழந்தது.

ஜெயா டிவி

இந்த நிலையில் தான் கடந்த வாரம் சேனல் 27 ஆண்டுகளைக் கடந்து 28வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு புத்தம் புதிதாக சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதன்படி முன்பு ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற குஷ்பு தொகுத்து வழங்கும் ஜாக்பாட் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் இயக்குனர் சேரன் பங்கேற்கும் டாக் ஷோ ஒன்றும் ஒளிபரப்பாக உள்ளது. இவை தவிர மைக் டெஸ்ட் 1, 2, 3, சனி பகவான் என இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கின்றன.

Television

தோல்வியில் முடிந்த விழா!

சில தினங்களுக்கு முன் நடந்த புதிய சேனலுக்கான லோகோ வெளியீட்டு விழா அத்தனை சொதப்பல்களுடன் நடந்து முடிந்ததாம்.

சேனலின் பெயரில் ஆளுங்கட்சியின் பெயரும் இருந்தது மற்றும் சமீபத்தில் அந்தக் கட்சியில் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேனல் நிர்வாகத்தில் முக்கியமான ஒருவர் எனச் சொல்லப்பட்டதால் விழாவுக்கு அமைச்சர்கள் பலரும் வரவிருப்பதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி நடக்குமிடமாக முதலில் கடற்கரை சாலையில் இருக்கும் ஒரு அரங்கத்தைத் தேர்வு செய்யலாமென நினைத்தார்களாம். ஆனால் என்ன நடந்ததோ கடைசியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது நிகழ்ச்சி. மீடியாவுக்கு அனுமதி இல்லை. கடைசியில் நிகழ்ச்சியில் எந்தவொரு அமைச்சரும் கல‌ந்து கொள்ளவில்லை. ஏன் சட்டமன்ற உறுப்பினர் கூட ஒருவரும் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

அமைச்சர்கள் பலர் வருகிறார்கள் எனச் சொல்லியே விழா ஏற்பாட்டாளர்கள் ஸ்பான்சர் பிடித்திருந்த நிலையில் அந்த ஸ்பான்சர்கள் படு அப்செட்டாம்.

கடைசியில் ஓனர் எனச் சொல்லப்படும் அந்த நபரே லோகோவை வெளியிட்டு விழாவை முடித்தாராம்.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.