மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்... அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!
மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், இவர் மனைவி மணியம்மை மதுரை மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவர்களது மகன் மருத்துவராகவும், மகள் பேராசிரியராகவும் பணிபுரிந்துவருகின்றனர்.
பழனிவேலின் மனைவி மணியம்மை தனது இறப்பிற்குப் பின்பாக தன்னுடைய உடலை தானமாக வழங்க வேண்டும் என தனது ஆசையை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மணியம்மை, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மனைவியின் ஆசைப்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் உடல் தானம் குறித்து கணவர் பழனிவேல் தகவல் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மறுநாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செயல்படாது எனக் கூறியதுடன், உடலை நேரடியாக உடற்கூறியல் துறைக்கு கொண்டு வராமல் அரசு மருத்துவமனை பிணவறையில் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில் மனைவியின் குடும்பத்தினரோ பிணவறைக்கு உடலைக் கொண்டுசெல்வதற்கு தயங்கியபோதும், அவரின் ஆசைக்காக பழனிவேல், மணியம்மையின் உடலைக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு அங்கு எந்தவித உதவியும் கிடைக்காமல், அவர்களே உடலை பிணவறைக்குள் எடுத்துச் சென்று வைத்ததாகச் சொல்கிறார்கள்.
பின்னர் இது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், பழனிவேல் குடும்பத்தினர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி மணியம்மையின் உடலானது பிணவறையில் இருந்து உடற்கூறியல் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக உடலை தானம் அளித்தும், அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் உடல்தானம் செய்வதில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகிய ஓய்வுபெற்ற உதவி ஆணையர் பழனிவேல், தனது மனைவிக்கு நடந்ததுபோல உடல் தானம் அளிக்கும் யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது என்பதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார், பழனிவேல்.

இது குறித்து பேசிய மணியம்மையின் கணவர் பழனிவேல், "மனைவியின் கடைசி ஆசையைக்கூட சந்தோஷமாக நிறைவேற்ற முடியாம போச்சு. அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் மனைவியின் சடலத்தோடு அலைக்கழிக்கப்பட்டோம், சுதந்திர தின நாளில் உயிரிழந்த அரசு ஓய்வுபெற்ற அதிகாரிக்கே இந்த நிலைமைனா... சாதாரண மக்களுக்கு என்ன ஆகும்? உடலை தானமாக அளித்தும் பிணவறையில் வைக்கப்பட்டதால் உடல்தானம் செய்யும் எண்ணமே சிதைந்துவிட்டது. அரசு மரியாதை கொடுக்க வேண்டாம், எனது மனைவியின் உடலை ரோட்டில் தூக்கிப்போட்டது போல செய்துவிட்டனர். இனியாவது இது போன்று நடக்க கூடாது, கல்லூரியில் ப்ரீசர் பாக்ஸ் இல்லைன்னு சொல்லிருக்காங்க. என்னிடம் பணம் இருக்கு, நானே 10 ப்ரீசர் பாக்ஸ் வாங்கிக் கொடுத்துருப்பேன்... ஏன் இப்படி பண்றீங்க?" என்றார்.
மேலும், உடல் தானம் செய்ய முன்வருபவர்களுக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் உடல் தானம் செய்ய பலரும் தயங்கும் நிலை உருவாகும். விடுமுறை நாள்களிலும் உடல் தானம் பெறுவதற்கான முறையான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

