`என் விசுவாசத்தைப் பார்த்து தனிக்கடை வச்சுக் கொடுத்திருக்கார் முதலாளி! - காதல் கரட்டாண்டி அருண்

காதல் படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் சிறுவன் கரட்டாண்டியாக நடித்தவர் அருண். அந்தப் படத்தின் ரீச் மூலம் சிவகாசி உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்தார். பிறகு திரையில் ஆளையே பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், தற்போது மதுரையில் ஃபர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா முயற்சியையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவர, அவரைக் கண்டுபிடித்துப் பேசினோம்.

எங்க ஊர்ல மாதா ஸ்கூல்னு சொல்வோம். அந்தப் பள்ளிக்கூடத்துல எட்டாவது படிச்சிட்டிருந்தப்ப நாடகத்துல நடிச்சேன். அதைப் பார்த்துட்டே காதல் படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. சின்ன கேடக்டர்னாலும் செமயா ரீச் ஆச்சு கரட்டாண்டி கேரக்டர்.

படம் ரிலீஸான புதுசுல எங்க ஏரியாவுல அவ்வளவு பாராட்டு. அந்த சூட்டோட சூடா பல படங்கள் புக் ஆச்சு. ஆனா எங்க அப்பாவும் அண்ணனும்தான் எல்லாத்தையும் முடிவு செய்தாங்க. மலையாளம் உள்ளிட்ட வேற மொழிகள்ல கூட சில படங்கள்ல நடிச்சேன்.

ஆனா என்ன ஒண்ணு வந்த எல்லாப் படங்கள்லயுமே ஒரே மாதிரியான அதாவது எடுபிடியா இருக்கிற அந்தச் சின்னப் பையன் கேரக்டராவே கிடைச்சது. அது ஒரு கட்டத்துல எனக்கே போர் அடிக்கத் தொடங்கிடுச்சு.

Kadhal Movie

இதுக்கிடையில் அப்பா, அம்மா, அண்ணன் மூணு பேருமே இறந்துட்டதால வாழ்க்கையில அடுத்து என்ன செய்யறதுனு தெரியாம, வழிகாட்ட ஆள் இல்லாத ஒரு சூழல் உருவாகிடுச்சு.

படிப்பை நிறுத்திட்டேன். சென்னையில இருந்தா நிறைய பட வாய்ப்பு வரும்னு அங்க வந்து நாலு மாசம் இருந்தேன். கையில இருந்த காசெல்லாம் காலியானதுதான் மிச்சம். ஒண்ணும் நடக்கல.

அதனால திரும்பவும் மதுரைக்கு வந்து பிழைப்புக்கு வழி வேணும்னு ஒரு ஃபர்னிச்சர் ஷாப்ல வேலைக்குச் சேர்ந்தேன். கடவுள் புண்ணியத்துல நல்ல முதலாளியா கிடைச்சார். அப்ப இருந்து இப்ப வரை அங்கேயேதான் வேலை பார்த்துட்டிருக்கேன்.

அவரும் என்னை வேலைக்காரன் மாதிரி நடத்த மாட்டார். தம்பியாதான் பார்க்குறார். சினிமா வாய்ப்பு வந்தாலும் தாராளமா போய் நடிச்சுட்டு வான்னு சொல்லிடுவார். நானும் நேரம் காலம்னு வேலையில கணக்கெல்லாம் பார்க்க மாட்டேன். ரொம்ப நாள் சின்சியரா இருந்ததாலயும் என் விசுவாசத்தையும் பார்த்து இப்ப அவரே தனியா ஒரு யூனிட் போட்டு,`இனி, இது உன் கடை! நீ பார்த்துக்கோனு சொல்லி வச்சுக் கொடுத்திருக்கார்.

சினிமாவுல நடிச்சதுனு பார்த்தா எழுபது படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். ஆனா சுமார் 25 படங்கள்தான் வெளியாகியிருக்கும்.

ஆனாலும் மனசுல கவலை எதுவுமில்லை. சினிமாவைத் தேடிப் போய் வாழ்க்கையை தொலைத்த எத்தனையோ பேரை பார்க்குறோம்ல. அதனால பிழைப்புக்கு ஒரு வேலை இருக்கேன்னு சந்தோஷப் பட்டுக்குவேன்.

அழகான குடும்பம் இருக்கு. பஞ்சவர்ணத்தைக் காதலிச்சுதான் கல்யாணம் செய்தேன். மகளுக்கு நாலு வயசாகுது.

சினிமா வேண்டாம்னு நான் ஒதுங்க‌லை. இப்பவும் வாய்ப்பு வந்தா பண்ணத் தயாராதான் இருக்கேன்.

kadhal arun

ஆனா என்னைச் சின்னப் பையனாகவே பார்த்தவங்க இப்ப என்ன கேரக்டர் தர்றதுனு யோசிக்கிறாங்களோ என்னவோ என்றவரிடம்,

காதல் படம் இன்னும் அடையாளம் தந்து கொண்டிருக்கிறதா எனக் கேட்டோம்.

``ஆமா சார். போன வாரம் திருவில்லிபுத்தூர் போயிருந்தேன். பஸ்ல தான் போனேன். பக்கத்து சீட்ல உட்கார்ந்திருந்தவர், கொஞ்ச நேரம் உத்துப் பார்த்துட்டே கேட்டுட்டார்.

ஆமா சார்... நான் அவனேதான்னு சொன்னதும், என்ன தம்பி பஸ்ல வர்றீங்கனு கேட்டார்.

ஊர்ல நான் வேலை பார்க்கிற கடைக்கு வீட்டுல் இருந்து நடந்துதான் போவேனு சொல்லி அவர் வாயை அடைச்சேன்" எனச் சிரிக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.