ஜெயிலில் ஸ்கெட்ச்; இன்ஸ்டாகிராமில் பிளான்! புதுக்கோட்டையில் சிக்கிய அமாவாசை திருட்டுக் கும்பல்!

கோழி திருடன், ஆடு திருடனுடன் சிறையில் கூட்டணி சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பிளான் போட்டு, பகலில் பைக்குகளையும், அமாவாசை இரவுகளில் கோயில் உண்டியல்களையுன் கொள்ளையடித்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை, கடியையும் பொருட்படுத்தாமல் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

ஒரே இரவில் 3 உண்டியல்கள் காலி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில், கடந்த அமாவாசை இரவில் மழைமாரியம்மன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் ஆகிய 2 கோயில்களுக்குள் புகுந்த மர்ம கும்பல், ஒரே இரவில் 3 உண்டியல்களை உடைத்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியது. இதே கும்பல் கடந்த மாதம் கொடிக்கரம்பை பகுதியில் திருட முயன்றபோது, ஊர் மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பிச் சென்று, வழியில் நின்ற வேறொரு பைக்கை திருடிச் சென்றது. ஆலங்குடி, ஆவுடையார்கோயில் என வரிசையாக உண்டியல்கள் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சில்லரை மூட்டையுடன் சிக்கிய திருடன்

இதையடுத்து ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அமாவாசை நாளில் நாள் குறித்துத் தூக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையை வைத்துப் பார்த்தபோது, அறந்தாங்கி அருகே வேதியன்குடியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவன் மாட்டியுள்ளான். உடனே விரைந்த போலீஸார், திருடிய சில்லரை காசு மூட்டையை தலைக்கு வச்சு சொகுசாகத் தூங்கிக் கொண்டிருந்த காளிதாஸை தூக்கினர்.

சிறையில் போட்ட ஸ்கெட்ச் – இன்ஸ்டாவில் பேச்சு!

காளிதாஸிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

"ஜெயிலில் இருந்தபோது திருநாளூர் கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் ஆடு திருடன் நாகராஜ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் குரூப் போட்டு பேசி பிளான் பண்ணுவோம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் விட்டு பைக்குகளைத் தூக்குவோம். இரவில் கோயில் உண்டியலை உடைத்து காசைப் பிரித்து ஜாலியாக சரக்கடிப்போம்" என வாக்குமூலம் கொடுத்தான்.

‘பிடிக்க வந்தா கடிப்பான் சார்!’

மேலும், "நாகராஜைப் பிடிக்கப் போகும்போது மட்டும் ரொம்ப உஷாரா இருங்க சார், யார் வந்தாலும் கடித்துவிட்டு தப்பி ஓடிடுவான்" என காளிதாஸ் போட்டுக் கொடுத்துள்ளான். போலீஸ் டீம் நாகராஜை வளைத்துப் பிடித்தபோது, அவன் எதிர்பாராதவிதமாக 2 போலீசாரைக் கொடூரமாகக் கடித்துக் குதறினான்.

ஆட்களைக் கடித்துவிட்டு தப்ப முயன்ற நாகராஜை, கடியையும் பொருட்படுத்தாமல் ரத்தக் காயத்தோடு போலீஸார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கூட்டாளி விஜய்யையும் கைது செய்தனர்.

போலீசுக்கு பாராட்டு

கைதான 3 பேரையும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். அமாவாசை திருடர்களைக் கடியையும் பொருட்படுத்தாமல் பிடித்த தனிப்படை போலீசாருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த கும்பலைக் காவலில் எடுத்து, அவர்கள் திருடிய பைக்குகளை மீட்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.