கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள் - கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய கனிமொழி சந்தோஷ், ”தமிழில் வணக்கம் என்று கூறினால் ட்ரோல் செய்து விடுவார்கள். எனவே ட்ரோலில் உள்ளதையே கூறிவிடுகிறேன், அனைவருக்கும் மன்மத வணக்கம்.
100 நாளில் இந்த மேனா மினுக்கி என்ன செய்து கிழித்து விட்டார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு பணியை ஆற்றி வருகிறேன். சித்தி சீரியல், அண்ணாமலை சீரியல், பிக் பாஸ் எல்லாம் தாண்டி சட்டசபை தற்போது நன்கு ரீச் ஆகியிருக்கிறது.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் பற்றி பேசும்பொழுது தனக்கு மிகவும் கோபம் வந்தது. ஆனால் அங்கு எதையும் காட்டிக் கொள்ள முடியாது. அதனால் தற்போது அந்த உண்மையைச் சொல்கிறேன். நான் கட்சியில் சேர்வதற்கு முன்பு இதே ஜோதிடரிடம் கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாகக் கூறி எனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு 15 லட்சம் ரூபாய் தருவதாக பேக்கேஜ் பேசினார்கள். அப்போது கூட திமுக ஜெயிக்காது என்று கணித்தேன். என்னிடம் அவர்கள் பேசிய ரெக்கார்டு எல்லாம் இருக்கிறது.
என்னை அழகான பொம்மை எனக் கூறுகிறார்கள். இந்த அழகான பொம்மை ஆபத்தான பொம்மையும் கூட என்றும் தூரமாக நின்று முகம் தெரியாமல் பேசிக் கொள்ளுங்கள் என் முகத்திற்கு முன்பு வந்தால் இந்த அழகான பொம்மை என்ன செய்யும் என்பது பிறகு தெரியும்.
2031 தேர்தலில் இரண்டு கட்சி எல்லாம் இருக்காது, நம்முடைய ஒரே கட்சிதான் இருக்கும். இரண்டு கட்சிகளுக்கு இடையில் போட்டி என்றெல்லாம் இருக்கவே இருக்காது.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஐடி விங்க் கவுண்டம்பாளையத்திற்கு இலவச விளம்பரம் செய்கிறார்கள். தற்போது வெளி தொகுதி மக்கள் எல்லாம் கவுண்டம்பாளையத்திற்குக் குடிபெயர்ந்து வருகிறார்கள் என்று தகவல் வருகிறது. ஏற்கனவே நமது தொகுதியில் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
நம்மிடம் இன்னும் முழு அரசாங்கம் உருவாகவில்லை. அதற்கு இன்னும் மூன்று மாத காலங்களாகும். கொசு தொல்லை தாங்க முடியவில்லை. அதனை எல்லாம் தட்டி தூக்குவதற்குக் காலமாகும். மூன்று மாதம் வேலை செய்யுங்கள். மூன்று மாதத்திற்குப் பிறகு பெரிய விழா நடத்தலாம்” எனத் தெரிவித்தார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

