``எம்.எல்.ஏ-க்களுக்கு சலுகை... தூய்மைப் பணியாளருக்கு ஏமாற்றமா? - உழைப்போர் உரிமை இயக்கம் கேள்வி

நகராட்சி நிர்வாகத் துறையைத் தன் வசம் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் உடனடியாக தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``10 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வெறும் ரூ19,000 ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கவும், அவர்களின் உதவியாளருக்கு சம்பளம் வழங்கவும் நிதி ஒதுக்கும் அரசு, தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்கூட வழங்க முடியாதா? எனவே, ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலியான ரூ.832 வழங்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 வழங்க வேண்டும்.

ஆபத்தான சூழலில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பெரும் முறைகேடு நடக்கிறது.
தூய்மைப் பணியாளர்களைக் கொத்தடிமைகளாக, மனிதநேயமற்ற முறையில் நடத்தக் கூடாது.

அரசு ஊழியர்களுக்கு 3-வது பிரசவம் என்றாலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதைப் போல, பெண் தூய்மைப் பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 365 நாட்களும் விடுப்பின்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறையும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமற்ற உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களின் அத்தியாவசியத் தேவைகளான கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளைச் செப்டம்பர் 15-க்குள் செய்து தருவதாக மாநகராட்சி ஆணையர் உறுதியளித்திருக்கிறார்.

கு.பாரதி
கு.பாரதி

அதேநேரம், தேர்தல் வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. போராட்டக் களத்தில் சீருடை அணியாத ஆண் காவல்துறையினரைக் கொண்டு பெண் தொழிலாளர்களை மிரட்டுவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். முதலமைச்சரைச் சந்தித்துத் மனு அளிக்கும் வரை தங்களின் நியாயமான அறப்போராட்டம் தொடரும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.