தருமபுரி: கயிற்றால் இறுக்கி, கல்லைக் கட்டி குட்டையில் வீச்சு; மாமியாரைக் கொன்ற மருமகனோடு ஐவர் கைது
."மாமியாரை காரில் கடத்திச் சென்று, கயிறால் கழுத்தை இறுக்கி கொன்று குவாரி, குட்டையில் போட்டு வந்தவனின் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்கிறார்கள் வெங்கடசமுத்திரம் மக்கள்.
க்ரைம் சினிமாவில் வருவதுபோல், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகிலுள்ள வெங்கடசமுத்திரத்தில், அசோகன் என்பவரின் மனைவி சசிகலா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களின் மருமகன் அஸ்லாமையும் கூட்டாளிகளையும் போலீஸ் கைது செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த அசோகன்-சசிகலா தம்பதிக்கு 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் உமா மகேஸ்வரி, அந்த ஊரில் டிபன் கடை நடத்திவரும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளரான அஸ்லாமைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி வெளியில் சென்ற சசிகலா வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிய கணவர் அசோகன், வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருப்பதைப் பார்த்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சசிகலாவைக் கண்டுபிடிக்க அரூர் டி.எஸ்.பி சதீஷ்குமார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.
பிறகு என்ன நடந்தது என்பதை காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். "சசிகலா குறித்து பலரிடமும் விசாரித்தபோது சரியான தகவல் கிடைக்கவில்லை. அப்போதுதான் வாணியம்பாடியிலுள்ள குவாரி குட்டையில் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டதாக அங்குள்ள போலீசார் தகவல் தெரிவிக்க, அது சசிகலாவின் உடல் என்பதை உறுதி செய்தோம்.
அதன் பிறகு உறவினர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, உமா மகேஸ்வரியின் கணவர் அஸ்லாம் முன்னுக்குப்பின்னாகப் பேச ஆரம்பித்தது மட்டுமின்றி, சம்பவம் நடந்த அன்று காலை அவருடன் சசிகலா காரில் சென்றதைச் சிலர் பார்த்துள்ளனர்.

அஸ்லாமுக்கும் மாமியார் சசிகலாவுக்கும் இடையே நகை விஷயத்தில் ஏற்கெனவே பிரச்னை இருந்தது விசாரணையில் தெரிய வந்ததால், தொடர்ந்து அஸ்லாமிடம் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
டிபன் கடை நடத்தி வந்த அஸ்லாம், சூதாட்டத்தில் பணத்தை இழந்து பல லட்சம் கடன் நெருக்கடியில் இருந்திருக்கிறார். வேலைக்குச் சென்றுவரும் மனைவி உமா மகேஸ்வரி, சமீபகாலமாக கணவனின் நடவடிக்கை பிடிக்காமல் சம்பளப் பணத்தை தாயாரிடம் கொடுத்து வைத்தது அஸ்லாமுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன் மாமியார் வீட்டிலிருந்து 5 பவுன் நகையை யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்தது தெரிந்து சசிகலா, அஸ்லாமிடம் சண்டை போட்டுள்ளார்.
வளையல் வியாபாரம் செய்து வரும் சசிகலாவிடம் நகையும், பணமும் அதிகம் இருப்பதைத் தெரிந்துகொண்ட அஸ்லாம், தன் மனைவிக்குப் போடவேண்டிய நகைகளைப் போடும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில்தான் கடந்த 15 ஆம் தேதி காலை சசிகலா மட்டும் வீட்டில் இருந்தபோது, வேலைக்குச் சென்ற மாமனார் அசோகன் விபத்தாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அஸ்லாம் கூறியதை நம்பிய சசிகலா, வீட்டிலிருந்த 10 பவுன் நகை, 15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அஸ்லாம் வந்த காரில் ஏறிச் சென்றுள்ளார்.
அந்தக் காரை அஸ்லாமின் நண்பர் ஓட்டியுள்ளார். 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூனையானூர் பகுதியில் கார் சென்றபோது அவரிடமிருந்த நகை பணத்தைத் தன்னிடம் கொடுக்குமாறு அஸ்லாம் கேட்க, அப்போதுதான் ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைத் தெரிந்துகொண்ட சசிகலா சண்டை போட்டுள்ளார்.

அப்போது முன் சீட்டிலிருந்த சசிகலாவைத் தாக்கி கழுத்தில் நைலான் கயிற்றைச் சுற்றி இறுக்கித் துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்பு உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு டிஸ்போஸ் செய்ய ஒவ்வொரு இடமாக அலைந்து எதுவும் அமையாததால், பூனையானூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலேயே பகல் முழுவதும் காரை நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.
காரில் பிணத்தை வைத்து அலைந்தால் போலீஸ் சோதனையில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான நண்பர் பூபாலை வரவழைத்து, அன்று இரவு வாணியம்பாடிக்கு உடலைக் கொண்டு சென்று அங்கு செயல்படாத குவாரிக் குட்டையில் கல்லைக்கட்டி போட்டுள்ளனர். அதற்கு முன் சசிகலா அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட 23 கிராம் நகைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.
வளையல் வியாபாரம் செய்யப்போன சசிகலா காணாமல் போய்விட்டார் என்று குடும்பத்தினர் நினைத்துக் கொண்டு சில நாளில் மறந்துவிடுவார்கள் எனத் திட்டமிட்டிருக்கிறான் அஸ்லாம். ஆனால், சசிகலாவிடமிருந்து கைப்பற்றிய மொபைல் போனை அஸ்லாம் மறைத்து வைத்திருந்ததும், காரில் சென்றது சி.சி.டி.வி-யில் பதிவானதும்தான் அவரைக் காட்டிக் கொடுத்தது. நகைக்காக மனைவியின் தாயாரைத் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்ய எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை" என்றனர்.
வெங்கடசமுத்திரத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, "ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த அஸ்லாம் தி.மு.க-வில் பொறுப்பில் இருந்ததால் எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். காதல் திருமணம் செய்துகொண்டு நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். சமீபகாலமாக அவன் நடவடிக்கை சரியில்லை; கடன் பிரச்னக்காக இப்படிக் கொலை செய்யலாமா?" என்றனர்.
"நகைக்காக மட்டும் இக்கொலை நடந்ததா? வேறு ஏதும் காரணம் உள்ளதா?" என்று அரூர் டி.எஸ்.பி சதீஷகுமாரிடம் கேட்டோம். "நகைக்காகத்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. அஸ்லாமுக்குப் பணத்தேவை அதிகம் இருந்துள்ளது. இதனால் சசிகலாவைக் கொலை செய்து நகைகளை எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறான். சி.சி.டி.வி பதிவுகள், மொபைல் போன் சிக்னல் அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. எங்கள் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்" என்றார்.
அஸ்லாம், அவனின் நண்பர்கள் பூபால், நவீன், ஜாகிர், சமியுல்லா ஆகியோரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


