வணக்கம் சென்னை கண்காட்சி: பழைய மெட்ராஸின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிய அரிய கண்காட்சி!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற ‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் RMRL கண்காட்சி’ நிறைவு பெற்றது.

மெட்ராஸ் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் (RMRL) ‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் RMRL கண்காட்சி’ நடைபெற்றது.

ஆகஸ்ட் 17 முதல் 22 வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சி, சென்னை நகரின் பல்வேறு காலகட்டங்களையும் அதன் மாற்றங்களையும் அச்சுப் பதிவுகள் வழியாக அறிந்துகொள்ள பார்வையாளர்களுக்கு வாய்ப்பளித்தது.

‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் கண்காட்சி

சென்னையின் கட்டிடக்கலை, கலாசாரம், அரசியல், சமூக மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைப் பதிவு செய்த வெளியீடுகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

நகரம் எவ்வாறு வளர்ந்தது, அதன் அடையாளங்கள் எவ்வாறு மாறின என்பதைக் கடந்த காலப் பதிவுகளின் வழியே தெரிந்துகொள்ள முடிந்ததால், வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரும் கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சென்னை நகரம் சார்ந்த பதிவுகளை ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த கால சென்னையை அன்றைய எழுத்து மற்றும் அச்சுப் பதிவுகளின் வழியாகப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இந்தக் கண்காட்சி அமைந்தது.

வடசென்னை - வரலாறும் வாழ்வியலும்
வடசென்னை - வரலாறும் வாழ்வியலும்

கண்காட்சியில் கவனம் ஈர்த்த சில புத்தகங்கள் 

 *வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்* 

எழுத்தாளர், சமூக ஆய்வாளர் மற்றும் வரலாற்றாளர் நிவேதிதா லூயிஸ் எழுதிய "வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்" என்ற நூல், சென்னையின் ஆதிப் பகுதியான வடசென்னையின் உண்மையான முகத்தையும் அதன் உழைக்கும் மக்களின் வாழ்வையும் விரிவாகப் பேசும் ஒரு சிறந்த வரலாற்றுப் பதிவு நூலாகும்.

சினிமாக்களிலும் பொதுப்புத்தியிலும் வடசென்னை என்றாலே சண்டை, வன்முறை, குற்றம் நிறைந்த பகுதி என்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள தவறான பிம்பத்தை இந்நூல் உடைக்கிறது.

வடசென்னையின் உண்மையான இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் கடின உழைப்பு, கலாசாரம், கலைகள் மற்றும் அவர்களின் வாழ்வியலை நேர்மையுடன் விவரிக்கிறது.

*கறுப்பர் நகரம்* 

எழுத்தாளர் கரன் கார்க்கி எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘கறுப்பர் நகரம்’ நாவல், தமிழிலக்கியத்தில் வடசென்னை மற்றும் கூவம் நதிக்கரை மக்களின் வாழ்வியலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்த ஒரு முக்கியமான படைப்பாகும்.

கறுப்பர் நகரம்
கறுப்பர் நகரம்

 *கட்டடம் சொல்லும் கதை* 

ஆர். வெங்கடேஷ் எழுதிய ‘கட்டடம் சொல்லும் கதை’, இந்த புத்தகம் சென்னைப் பெருநகரின் வண்ணமயமான வரலாற்றை அங்குள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வாயிலாக மிக அழகாக விவரிக்கிறது. சென்னை (மெட்ராஸ்) நகரின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றுப் பரிணாமத்தை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி புத்தகமாக அமைந்தது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி, மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தை வெறும் நிகழ்வாக மட்டுமின்றி, நகரின் கடந்த காலத்தை மீண்டும் நினைவுகூரும் அனுபவமாக மாற்றியது.

பழைய பதிவுகளைத் தேடி அறியவும், சென்னையின் வரலாற்றை புதிய பார்வையில் புரிந்துகொள்ளவும் பார்வையாளர்களிடம் உருவான ஆர்வமே கண்காட்சியின் முக்கியமான கவனம்  ஈர்த்த நிகழ்வாக அமைந்தது...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.