கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? - திமுக ஊழல் ஆதாரம் குறித்த கேள்விக்கு அருண்ராஜ் கிண்டல் பதில்
முழுமையாக 100 நாட்களைக் கடந்துவிட்ட த.வெ.க ஆட்சியில், தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான விவாதங்களில் அனல் பறக்கின்றன.
லஞ்சம், ஊழல் அற்ற ஆட்சியைக் கொடுப்பேன் எனச் சூளுரைக்கிறார் தமிழக முதல்வர் விஜய். ஆனால், எதிர்த்தரப்பிலோ த.வெ.க ஆட்சியில் அரங்கேறிவரும் லஞ்சம், ஊழல்களைப் பட்டியல் போட்டு பரபரப்பு கிளப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, அரசியல்வாதிகளின் ஆபாச, அவதூறுப் பேச்சுகள், மாணவர் போராட்டம், காவிரி விவகாரம், தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம் என அன்றாட நிகழ்வுகள் பரபரப்புகளைக் கூட்டி வருகின்றன.
இந்தச் சூழலில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜிடம் நமது கேள்விகளை முன் வைத்தோம்....
"கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில், ஊழலை இயல்பான நடைமுறையாக்கிவிட்டனர் ஆட்சியாளர்கள் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறீர்களே... என்ன காரணம்?"
"நான் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவன். அரசியல் எல்லாம் நமக்கெதுக்கு... என்ற அறிவுரைதான் முதலில் எனக்குக் கிடைத்தது. நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்து இதுவாகத்தானிருக்கிறது.
இதற்கு அரசியல்வாதிகளை மட்டுமே நாம் குறை சொல்லிவிட முடியாது. ஏனெனில், கொடுக்கல், வாங்கல் என இரண்டு தரப்பிலுமே தவறு இருக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள், வாக்குக்கு பணம் கொடுத்து மக்களைப் பழக்கிவிட்டன.
குறிப்பிட்ட இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்ததும், வாக்குகளுக்கு பணம் கொடுக்காவிட்டால், ஏன் பணம் கொடுக்கவில்லை என மக்களே கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு உரிமையாகவும் இந்தக் கலாசாரம் வளர்ந்துவிட்டிருந்தது.
இதில், இரு தரப்பிலும் தவறு இருந்தாலும்கூட, அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்க முடியாது. ஏனெனில், தவறு நடைபெறாமல் தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவர்கள்தான். அதனால்தான், ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்தோடு, தமிழ்நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் மிகப்பெரிய பொறுப்புணர்வோடு முதல்வர் செயல்பட்டு வருகிறார். இதைத்தான் நான் அன்றைய சட்டசபை பேச்சிலும் குறிப்பிட்டிருந்தேன்"
"கடந்த ஆட்சியில் ஊழல் நடந்துவிட்டது எனக் குற்றச்சாட்டை முன்வைக்கும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும் என தி.மு.க-வினர் கேட்பதில் நியாயம் இருக்கிறதுதானே?"
"நியாயம்தான். அதேசமயம் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்"
"சட்டசபையில், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர் தவிர்த்து, த.வெ.க-வின் மற்ற அமைச்சர்களும் பதிலளிக்கிறார்களே... ஏன்?"
"அப்படியல்ல... எல்லா அமைச்சர்களுமே தங்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கிறார்கள். ஆரம்பத்தில் சிறு தயக்கம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல!"
"அண்மையில், முதல்வர் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமான முறையில் விமர்சித்துவிட்டதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வாழ்த்துகள் என நீங்கள் பேசியிருந்தது சர்ச்சையாகியிருக்கிறதே?"
"செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அந்த வேளையில், நான் நயினார் பேசிய அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்திருக்கவில்லை. ஆனால், அதன்பிறகு வீடியோவைப் பார்த்தபோதுதான் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருப்பதைத் தெரிந்துகொண்டேன்"

"த.வெ.க அரசு அமைந்து 100 நாள்களை எட்டியுள்ள இந்தச் சூழலில், மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்து அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிட்டதை என்னவென்று புரிந்துகொள்வது?"
"அந்தச் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது. மாணவர்கள் கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. அதேசமயம், அனைவருக்குமே அரசியல் புரிதல் கட்டாயம் வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் நாளைய எதிர்காலத் தூண்கள். த.வெ.க அரசின் நிலைப்பாடும் இதுதான்"
"கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், எங்கள் மாநில நிர்வாக விஷயங்களில் யாரும் தலையிட முடியாது என ஆணவத்துடன் பேசுகிறார் அம்மாநில முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து கண்டனத்தைப் பதிவு செய்யக்கூட தமிழக முதல்வர் தயங்கிவருகிறாரே?"
"இல்லையில்லை... ஏற்கெனவே நமது கண்டனத்தைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் 25 வருடங்களுக்கு முன்பே கர்நாடகத்தில் போய் செட்டிலாகிவிட்டவர்கள். அங்கேயே வாக்காளர் அடையாள அட்டைகூட பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் இதேபோல், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். பக்கத்து மாநிலங்களோடு நமக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்துவந்தாலும்கூட, மக்கள் அனைவரையும் நாம் சொந்த உறவுகளாகத்தான் பார்த்து வருகிறோம். இவ்விஷயத்தில், முதல்வரே கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேசி வருகிறார்"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
