TNPL 2026: ப்ளே ஆஃப்ஸ்-க்குள் நுழைந்தன மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்!
TNPL-ன் 27 மற்றும் 28 ஆவது லீக் போட்டியானது சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும் மோதிக் கொண்டன.
சேலம் ஸ்பார்டன்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்
டாஸ் ஜெயித்த சேலம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான எஸ்.அபிஷேக் மற்றும் பூபதி குமார் ஆகியோர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களைக் குவித்திருந்தனர்.
பின் பூபதி குமார் 27(16) ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ஆர்.விவேக்கும் 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து எஸ்.அபிஷேக் 29(19) மற்றும் சன்னி சாந்து 1(3) விக்கெட்டுகள் விழத் தொடங்கியன.
அடுத்து வந்த கார்த்திக் மணிகண்டன் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகளை விளாசி 40 பந்துகளுக்கு 57 ரன்களைக் குவித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்த, பின் ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த எம்.ஈஸ்வர் 26(19) மற்றும் எம்.முகமது 16(10) என்ற ரன்களைச் சேர்த்திருந்தனர்.
சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்களை எடுத்திருந்தது. தனது சிறப்பான ஸ்பின் பவுலிங்கின் மூலம் மூன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 ஓவர்களுக்கு 18 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் எம்.மதிவாணன்.
அடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ்-ன் தொடக்க வீரர் சாத்விக் 16(10) ரன்களில் அவுட் ஆக, கேப்டன் துஷார் ரஹேஜா தனது பயங்கரமான பேட்டிங்கின் மூலம் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களைப் பறக்கவிட்டு டீமின் ஸ்கோரை உயர்த்தினார். பின் இறங்கி அடிக்க முயன்று 75(43) ரன்களில் கேட்ச் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து வந்த வீரர்களின் பேட் பேசவே இல்லை, ஒருவர் கூட 10 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் தனது கடைசி மேட்சில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதலுடன் வெளியேறினர்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் குவாலிஃபயர்-க்கு முன்னேறியது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கார்த்திக் மணிகண்டன் மேன் ஆஃப் தி மேட்ச் பெற்றார்.

மதுரை பாந்தர்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் !
இரு அணிகளும் ப்ளே ஆஃப்-க்கான பாதையை நோக்கி களம் இறங்கின. டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் பெரிதாக அமையவில்லை. ஆர்.ராம்குமார் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேர அடுத்தடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஹரி ராகவேந்திரா 35(29) ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இப்பொழுது ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ஷோயப் முகமது மற்றும் அதீக் உர் ரஹ்மான் கூட்டணி பவுலர்களின் எல்லா பந்துகளையும் பவுண்டரியும், சிக்சரும் எனப் பிரித்து மேய்ந்தனர். இருவரும் 41 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தனர்.
மற்றுமொரு பெரிய ஷாட்டுக்கு முயற்சித்த ஷோயப் முகமது 65(43) கேட்ச் அவுட் ஆனார். மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து 198 ரன்களை இலக்காக வைத்தது.

ப்ளே ஆஃப்ஸ் உனக்கா? இல்லை எனக்கா? என்ற முடிவுடன் அடுத்து களமிறங்கியது நெல்லை ராயல் கிங்ஸ். தொடக்கமே சொல்லத் தொடங்கியது வெற்றி மதுரைக்குத்தான் என, சந்தோஷ் குமார் 0(6) மற்றும் அதீஷ் 13(5) ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
பின் வந்த அஜிதேஷ் மட்டுமே 56(45) ரன்களை அடித்து ஆறுதல் கொடுத்தார். பின் அவரும் அவுட் ஆக, அடுத்து வந்த பேட்ஸ்மேன் அனைவரும் சரிவை நோக்கி நகர்ந்தனர்.
19.1 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது நெல்லை ராயல் கிங்ஸ். ப்ளே ஆஃப் கனவு தகர்ந்து போனது. மதுரை பாந்தர்ஸ் 75 வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்-க்கு முன்னேறியது. இதில் சிறப்பாக பந்து வீசி மற்றும் பேட்டிங் செய்ததற்காக ஷோயப் முகமது ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


