தமிழர்களின் உயிர் அல்பமானது கிடையாது - கொதிக்கும் ஜோதிமணி

காவிரி விவகாரம், கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது போன்றவைத் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி., ஜோதிமணியைப் பேட்டி கண்டோம்.

"காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன?"

"காவிரியில், தமிழகத்துக்கான உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். மற்றபடி நாம் யாரிடமும் உதவி கேட்டு நிற்கவில்லை. நடுவர் மன்றம், உச்சநீதி மன்றங்களில் காலங்காலமாக நாம் போராடி பெற்ற உரிமைகளையும் தீர்ப்புகளையும் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

எங்களுக்கே போதுமான தண்ணீர் இல்லை என்று கர்நாடகா தரப்பில் கூறினாலும் இருக்கிற தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான் தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு."

"காவிரிக்காக நீண்ட நெடும் சட்டப் போராட்டம் நடைபெற்றிருக்கும் வரலாற்றுப் புரிதல்கூட முதல்வர் விஜய்க்கு இல்லை; அதனால்தான் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயாரானார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினவே?"

"ஜனநாயக நாட்டில் பேச்சுவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. மகாத்மா காந்திகூட பிரிட்டிஷாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். எனவே, பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சித்தார் என்பதாலேயே முதல்வருக்கு வரலாற்றுப் புரிதல் கிடையாது எனச் சொல்வது சரியல்ல.

கடந்த காலத்தில் எம்.ஜி.ஆரும் ராமகிருஷ்ண ஹெக்டே உள்ளிட்ட பலரும் காவிரி விவகாரத்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சில நல்ல முன்னேற்றங்களும் நடந்திருக்கின்றன.

விஜய் - சிதம்பரம்
"காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் உரிய பலனளிக்கவில்லை என்பதுதானே கடந்த கால உண்மை. அதன்பிறகுதானே சட்டப் போராட்டமே தீர்வுக்கான வழி என்ற உறுதியான முடிவுக்கு தமிழ்நாடு வந்தது?"


"அப்படியல்ல... தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் முதல்வர் விஜய், சில புதிய முயற்சிகளை எடுக்கிறார். உதாரணமாக, வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் போய் சந்தித்தார்.

அந்தவகையில், கர்நாடகாவிலும் ஒரு புதிய முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழ்நாட்டிலும் புதிதாக முதல்வர் விஜய் பொறுப்பேற்றிருக்கிறார். ஆக இருவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காண முடியுமா என்று ஒரு முயற்சியைத்தான் முதல்வர் எடுத்தாரே தவிர... பேச்சுவார்த்தைக்குப் போவதாலேயே சட்டப் போராட்டம் அனைத்தையும் தமிழ்நாடு கைவிட்டுவிட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாது"

"ஆனால், அப்படி முயற்சி எடுத்துச் செல்ல முயன்ற நம் முதல்வரையும், கர்நாடக அரசு வரவேண்டாம் எனக்கூறி தடுத்து நிறுத்திவிட்டது தமிழ்நாட்டுக்கான அவமானம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் சொல்கிறாரே?"

"அதை நான் அவமானமாகப் பார்க்கவில்லை. தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால், அது தமிழ்நாட்டுக்கு முன்னுரிமையாகிவிடுமோ என்ற யூகத்தில்கூட அவர் வரவேண்டாம் என அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால், கர்நாடக அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டே வரவேண்டாம் என்று முடிவெடுத்ததாக அம்மாநில முதல்வர் சொல்கிறார்."

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
"புதிய தொகுதி மறுவரையறைக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் எட்டப்பர்கள் என ராகுல்காந்தி பேசிய பேச்சு, அரசியல் உள்நோக்கம் கொண்டதுதானே?"

"அப்படியல்ல... எல்லா நாடுகளிலுமே வாக்காளர்கள்தான் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் புதிய தொகுதி மறுவரையறை என்ற பெயரில், பா.ஜ.க ஒன்றிய அரசு, வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆக, இப்படியொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் புதிய மசோதா, வாக்கெடுக்குப்புக்கு வரப்போகிறது என்ற செய்தி கசிந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார் ராகுல் காந்தி. எனவே, புதிய மசோதாவுக்கு யாரும் வாக்களித்துவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியிருந்தாரே தவிர... இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை."

"புதிய மசோதா விவகாரம் முக்கியமானதுதான். ஆனால், அதைவிடவும் அதிமுக்கியமான காவிரி பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசவில்லையே?"

"காவிரி பிரச்னை முக்கியமானதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இல்லையென்றால் சோறு எப்படி தின்பது? ஆனால், புதிய மசோதா வரவிருக்கிற சூழலில், அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான வாக்குகள் தமிழ்நாட்டிலிருந்து சென்றுவிடக் கூடாது என்பதால்தான் ராகுல்காந்தி அவ்வாறு பேசினார்.

ஜோதிமணி
ஜோதிமணி

புதிய தொகுதி மறுவரையறை விவகாரத்தை முதன்முதலில் முன்னெடுத்தது தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியாக் கூட்டணிதான். எனவே இப்போதும் நாம் புதிய மசோதாவைத் தீவிரமாக எதிர்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் இது இந்தியா முழுமைக்குமான பேரழிவு.

இந்த நிலையில், நாம் மட்டும் தனியே தப்பித்துவிட முடியாது. எனவேதான் புதிய மசோதாவுக்கான எதிர்ப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல்காந்தி திரும்பத் திரும்ப பேசிவருகிறார்."

"மாநில நலன் என்று வரும்போது, தமிழ்நாட்டுக்கு எதிராக காங்கிரஸும் பா.ஜ.க-வும் தொடர்ந்து செயல்படுவதால்தான் தேசியக் கட்சிகளால் இங்கே ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்கிறார்களே?"

"நான் அப்படி நினைக்கவில்லை. நமக்கு காவிரி பிரச்னைபோல், ஹரியானா - பஞ்சாப் இடையேயும் நதிநீர் பிரச்னை காலங்காலமாக நடந்துவருகிறது. ஒரு கட்சி மாநில ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்குப் பல்வேறு காரணங்களும், நீண்ட நெடிய வரலாற்று தொடர்புகளும் இருக்கும். இதுபோன்று ஒரேயொரு பிரச்னையை மட்டும் முன்வைத்து, இதனால்தான் இந்தக் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை எனக் கருதிவிடலாகாது.

தமிழ்நாட்டில், காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாட்டிலேயே கடந்து வந்திருக்கிறது. இந்தச் சூழலில், சட்டமன்றத் தேர்தலை விடவும், நாடாளுமன்றத் தேர்தலே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவந்ததினால், தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

தேசியக் கட்சித் தலைமைப் பொறுப்பில் பல்வேறு கருத்துகளைக் கொண்டவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதனால், சில நேரங்களில், தேசியக் கட்சிகள் மாநில உணர்வுகளைச் சரியான அளவுக்குப் பிரதிபலிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

காலத்துக்கு ஏற்றார் போன்று பல்வேறு மாற்றங்களையும் கட்சிக்குள் செய்தாக வேண்டியிருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருக்கின்றன. இந்த விஷயங்களிலெல்லாம் தற்போது ராகுல்காந்தி மறுபரிசீலனை செய்துவருகிறார். எனவே, பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வலுப்படுவதற்கான சூழல்கள் உருவாகி வருகின்றன."

"கர்நாடகாவில், 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், கர்நாடக முதல்வர், எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பிலான நமது முதல்வர் கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லையே?"

"உலகின் எந்தவொரு மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பும் கடைமையும் தமிழக அரசுக்கும் எம்மைப்போன்ற அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது. அந்தக் கடமையிலிருந்து தமிழக அரசும் வழுவவில்லை.

ஓர் அரசாங்கமாக இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டுமோ அதை தமிழக அரசு சரியாகச் செய்திருக்கிறது. அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் நமது அரசு எடுத்த நடவடிக்கைகளினால் கோபமுற்றுத்தான் கர்நாடகா முதல்வர் இப்படிப் பொறுப்பற்று பேசியிருக்கிறார்.

ஆனால், அவரது பேச்சு எந்தச் சட்ட நடைமுறையின் கீழ் வரும்? இதே காரியத்தை தமிழ்நாடு செய்திருந்தால், கர்நாடகாவினர் கேள்வி கேட்க மாட்டார்களா? இல்லை... நாமும் கர்நாடகா முதல்வரைப்போல், எங்கள் மாநில சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நாங்கள் எதுவும் செய்வோம். நீங்கள் கேள்வி கேட்க முடியாது என்று சொல்ல முடியுமா? எனவே, கர்நாடகா முதல்வரின் கூற்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டனத்துக்கு உரியது. தமிழர்களின் உயிர் அந்தளவுக்கு அல்பமானது கிடையாது"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.