Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு விரல்களை வெட்டி அகற்றுவது ஏன்?
Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 60 வயதாகிறது. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களில் அவருக்கு கால்களில் ஒவ்வொரு விரலாக வெட்டி எடுத்துவிட்டார்கள்.
நடக்கவே சிரமப்படுகிறார். சர்க்கரைநோய் அதிகமானதுதான் காரணம் என்கிறார். சர்க்கரை நோயாளிகளுக்கு இப்படி விரல்களை வெட்டி எடுக்கும் நிலை ஏன் ஏற்படுகிறது... எல்லோருக்கும் இப்படி ஆகுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம்.
சர்க்கரை அளவு அதிகமானால் மட்டுமே விரலை வெட்டி எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்து நோயாளிகளுக்கும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதற்காக கால் விரல்களை வெட்டி எடுக்க மாட்டார்கள்.
சர்க்கரை நோயானது உடலிலிருக்கும் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். ரத்தத்தில் எங்கெல்லாம் சர்க்கரை அளவு அதிகமாகிறதோ, அங்கெல்லாம் பாதிக்கும்.
ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது கால் நரம்புகளைப் பாதிக்கும். கண்களைப் பாதிக்கும். இதயத்தைப் பாதிக்கும். ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அதுவும் பல வருடங்களாக அதிகமாக இருக்கும்போது இந்த உறுப்புகள் எல்லாம் பாதிக்கப்படும்.
நீண்ட வருடங்களாக சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, கால் நரம்புகள் பாதிக்கப்பட்டுவிட்டால் காலில் உணர்ச்சி இருக்காது. கால் நரம்பில் உணர்ச்சி இல்லாதபோது, எங்காவது கல்லோ, முள்ளோ குத்தினால் உங்களுக்கு உணர்ச்சி தெரியாது. அதனால் அது புண்ணாகும்.
பல நாள்களாகச் சர்க்கரை நோய் இருக்கும்போது, கால்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்பட்டிருக்கும். ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது.

புண் வந்தால் அந்த இடத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இருந்தால்தான் புண் ஆறும். சர்க்கரை அளவு அதிகமாக இருந்து ரத்த ஓட்டமும் சரியாக இல்லை எனும்போது அந்தப் புண் ஆறாது. மூன்றாவதாக, சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ரத்த ஓட்டம் சரியாக இல்லாததாலும், அதிகமான சர்க்கரை அளவாலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
பாக்டீரியா போன்ற கிருமித் தொற்றுகள் வரும்போது அதைக் குணப்படுத்துவதற்கு நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதபோது கிருமித் தொற்றும் அதிகமாகும்.
எனவே, ரத்தக் குழாய் பாதிப்பு, கிருமித் தொற்று இருப்பது, நரம்பு பாதிப்பு இருப்பது இவை எல்லாம் சேர்ந்து புண்ணை அதிகப்படுத்தும். புண் அதிகமாகும்போது உடம்பில் பாக்டீரியாவின் அளவு அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிட்டால் உடம்பு முழுவதற்கும் ரத்தத்தின் வழியாகப் பரவிவிடும்.
இந்த மாதிரியான சூழ்நிலையில், காலைக் காப்பாற்ற முடியாத நிலைக்குச் சென்றுவிட்டாலோ, விரல்களைக் காப்பாற்ற முடியாத அளவிற்குத் தொற்று தீவிரமாகிவிட்டாலோ, சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலோ, தொற்றும் வேகமாகப் பரவுகிறது எனும்போது உயிரைக் காப்பாற்ற, அந்தத் தொற்றை உடலை விட்டு வெளியேற்றினால்தான் நல்லது எனும் சூழலில் விரலை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
சர்க்கரை நோயாளிகள் இதைத் தடுக்க முடியும். சர்க்கரை அளவை ஒழுங்காகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதன் மூலமாக கால் நரம்பு பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படாமலும் தடுக்க முடியும்.

இதை ஆரம்பகட்டத்திலிருந்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். புண் வந்த பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்திப் பலன் இல்லை. ஏற்கெனவே நரம்பு மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டுவிட்டன என்றால், அதற்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது.
நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அடிபட்டாலும் புண் ஆறிவிடும். அதனால்தான் பல நோயாளிகள் சர்க்கரை இருந்தாலும் என் கால் புண் ஆறிவிடுகிறது எனக் கூறுகிறார்கள். அதற்கு ரத்தக் குழாய் பாதிக்கப்படவில்லை, நரம்பு ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
ரத்தக் குழாய் பாதித்தால்தான் நரம்பு தளர்வடையும். நரம்பு தளர்வடைந்து, தொற்றும் தீவிரமானால் விரலை எடுக்கும் நிலைமை ஏற்படும். அதனால் எப்போதும் சர்க்கரை நோயாளிகள் தினமும் முகத்தைக் கழுவி கண்ணாடியில் பார்ப்பது போல, காலைக் கழுவி, துடைத்து, காலில் ஏதாவது அடிபட்டு இருக்கிறதா, வீக்கம் வந்துள்ளதா, நிறம் மாறியிருக்கிறதா, சிவந்துள்ளதா அல்லது கருத்துப்போயுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
எதையுமே ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துத் தொற்று பரவுவதற்கு முன்பே சரியான மருத்துவம் எடுத்துக்கொண்டால், கால் விரலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
டாக்டர் சண்முகம்:
சென்னை அசோக்நகரில் செந்தூர் டயாபட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் என்ற பெயரில் கிளினிக் வைத்திருக்கிறார். நீரிழிவு மருத்துவத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

