குஜிலியம்பாளையம் தாசில்தார் சொந்த வெறுப்பில் செய்துள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "வருகிற 17-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் அதிகாரிகளுடன் தற்போது நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது 8000 நபர்கள் வரை கோயில் மேல் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் முழு தகவல்கள் வெளியிடப்படும்" என்றார்.
மாணவர்கள் போராடுவதற்கு தடை விதித்த, இடதுசாரி இயக்கத்தினரை கணக்கெடுப்பது உள்ளிட்ட சுற்றிக்கைகள் குறித்த கேள்விக்கு, ``குஜிலியம்பாறை தாசில்தார் சொந்த வெறுப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் 6 மாதத்தில் ஓய்வு பெறவுள்ளார். ஆட்சியருக்கே தெரியாமல் அதை செய்துள்ளார். தகவல் தெரிந்ததும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது மேலதிக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு இப்படி எந்த எண்ணமும் கிடையாது. ஒருசிலர் தான் இதை தவறாக அணுகியுள்ளனர்.
அரசு கல்லூரி மாணவர்கள் போராடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்தில் அரசுக்கு உடன்பாடு இல்லை.
கல்லூரிகள் அனைத்தும் கவர்னரின் மேற்பார்வையில் நடக்கிறது. கல்லூரிகளை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென பல ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறோம்.
பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கவர்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றன. இதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஜனவரி மாதம் வரும்போது எந்த பல்கலையிலும் துணை வேந்தர்கள் இருக்க மாட்டார்கள். நிர்வாக ரீதியாகவும் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவற்றை சீரமைக்க முயற்சித்து வருகிறோம்.

காலி பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடக்கவில்லை, சான்றிதழ்கள் கொடுக்க முடியவில்லை. கல்லூரிகளை மாநில அதிகாரத்துக்கு கொண்டு வந்தால் தான் நம்முடைய முழு கட்டுப்பாட்டில் செயல்படுத்த முடியும்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


