சர்க்கரை விலை ஏன் உயர்ந்தது? மத்திய அரசு சொன்ன காரணங்கள் இதோ! விலை உயர்வை தடுக்க 5 நடவடிக்கைகள்
இந்தியாவில் பண்டிகைகள் அடுத்தடுத்து வரிசைக் கட்டி நிற்பதால், சர்க்கரை தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதில் சில - சர்க்கரையை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யப்பட உள்ளது.
தற்போது மத்திய அரசு சர்க்கரை மீதான நடவடிக்கை எதற்காக எடுத்துள்ளது என்பதை விளக்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...
"கடந்த சில வாரங்களாகச் சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. ஜூலை 20, 2026 அன்று கிலோ ₹48.18 ஆக இருந்த சர்க்கரை விலை, ஆகஸ்ட் 20, 2026 அன்று ₹155.70 ஆக உயர்ந்தது.
நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சர்க்கரை தட்டுப்பாடின்றி கிடைக்கவும், நுகர்வோருக்கு விலை கட்டுப்படியாகும் வகையில் நிலைத்திருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
> எத்தனால் உற்பத்தியால் சர்க்கரை விலை உயரவில்லை:
சர்க்கரை விலை உயர்விற்கு எத்தனால் உற்பத்திக்குக் கரும்பு திருப்பி விடப்படுவதே காரணம் என்று கூறுவது தவறானது.
உண்மையில், எத்தனால் உற்பத்திக்குத் திருப்பி விடப்படும் சர்க்கரையின் பங்கு 2022-23-இல் 12 சதவீதமாக இருந்தது, 2025-26-இல் சுமார் 9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், நாட்டில் உற்பத்தியாகும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பகுதி தானியங்கள், குறிப்பாகச் சோளத்திலிருந்தே பெறப்படுகிறது.
தற்போது சர்க்கரை விலை உயர்ந்ததற்கு உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விடக் குறைந்தது.
பண்டிகைக் காலத்தையொட்டி அதிகரித்த தேவை, மோசமான வானிலையால் கரும்புப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம், உலகளாவிய சர்க்கரை சப்ளை குறைந்தது மற்றும் ஆலைகள்/வியாபாரிகளின் ஊக வணிகமும் கள்ளச்சந்தையில் சேமித்து வைப்பதும் (Hoarding) எனப் பல காரணங்களின் கூட்டமைப்பே ஆகும்.
உலக அளவிலும் சர்க்கரை விலை உயர்கிறது:
சர்க்கரை சப்ளை குறைவது என்பது இந்தியாவுக்கு மட்டும் உரியதல்ல, உலகளாவிய ஒரு சூழலாகும். 2026-27-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சர்க்கரை தட்டுப்பாடு சுமார் 33 எல்.எம்.டி ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வானிலை குறித்த கவலைகள் சர்வதேச நிலைமையை மேலும் பாதித்துள்ளன.
சர்க்கரை சப்ளையைச் சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது?
1. ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30, 2026 வரை நாடு முழுவதும் உள்ள சர்க்கரை வியாபாரிகளுக்கு 400 டன் இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
2. செப்டம்பர் 1 முதல், மொத்த நுகர்வோர்கள் (Bulk consumers) 15 நாட்களுக்குத் தேவையான பயன்பாட்டிற்கு மேல் சர்க்கரையை இருப்பாக வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தைத் தடுப்பைச் சரிபார்க்க, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் கூட்டுக் குழுக்கள் ஆலைகளில் நேரடியாகச் சென்று சர்க்கரை இருப்பை ஆய்வு செய்து வருகின்றன.

4. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டுச் சர்க்கரை இருப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் 10 எல்.எம்.டி கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
5. அக்டோபர் 15, 2026 முதல் கரும்பு அரைப்பதைத் தொடங்குமாறு மாநிலங்களுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாத சர்க்கரை உற்பத்தி வழக்கமான 3-4 எல்.எம்.டி-யிலிருந்து 10 எல்.எம்.டி-க்கும் அதிகமாக உயர்ந்து, பண்டிகைக் காலத்தில் சப்ளை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


