தஞ்சை: குட்கா கடத்தியவர்களை தப்பிக்க வைத்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூரில், கடந்த 10-ம் தேதி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம்(45) தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(45), முருகன்(48) ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட 83 கிலோ குட்காவை தஞ்சாவூருக்கு விற்பனைக்காக கடத்தி வந்த போது போலீஸில் பிடிப்பட்டனர்.

குட்கா

இந்நிலையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன்(35) மற்றும் போலீஸ் அழகர்கசாமி (37) ஆகிய மூவரும், குட்காவை பறிமுதல் செய்ததுடன் ஆறுமுகம் மற்றும் முருகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், அவர்களிடம் விசாரணை செய்து வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்காமல், பறிமுதல் செய்த குட்கா பொருட்களை மீண்டும் அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். இது குறித்து தகவலறிந்த நிலையில் எஸ்.பி சுந்தரவதனம் விசாரணை மேற்கொண்டார்.

இதில் குட்கா கடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இன்ஸ்பெக்டர் சண்முகம் அவர்களை விட்டு விட்டதும் இதற்கு ஆதரவாக ஏட்டு கவுதமன் மற்றும் போலீஸ் அழகர்சாமி செயல்பட்டது தெரியவந்தது என்கிறார்கள். லஞ்ச பணத்தை மூவரும் பிரித்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மேற்கு போலீஸார் கடந்த 11ம் தேதி வழக்கு பதிவுசெய்து, குட்கா கடத்திய ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர சண்முகம் கடந்த 13ம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்

இதையடுத்து, எஸ்.பி சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன் மற்றும் அழகர்சாமி ஆகிய மூவரையும் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே, போலீஸ் ஸ்டேஷன் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கை இன்ஸ்பெக்டர் சண்முகம் முறையாக கையாளவில்லை என்பது உட்பட அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.