₹20 லஞ்சம்... 30 ஆண்டுகள் நடந்த வழக்கு! - இறுதி விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

குஜராத்தில் ₹20 லஞ்சம் தொடர்பாக 1996-ல் தொடங்கிய வழக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு அலுவலகத்தின் கிளார்க் (clerk) மற்றும் பியூன் (peon) ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.

1996 பிப்ரவரியில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெச்சாரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மாணவர் ஒருவர் சென்றுள்ளார். கல்விச் சலுகைகளைப் பெறுவதற்காக அவருக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate) தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சான்றிதழை வழங்குவதற்காக கிளார்க் ஒருவர் ₹120 லஞ்சம் கேட்டதாகவும், அதில் ₹100 கிளார்க்கிற்கும், ₹20 பியூனுக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் Anti-Corruption Bureau (ACB)-யிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து ACB அதிகாரிகள், மாணவரிடம் அடையாளம் காணக்கூடிய வகையில் ₹120 பணம் கொடுத்து, அந்தப் பணத்தை அரசு ஊழியர்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

மாணவர் Income Certificate-ஐப் பெற்றார்.

அதன் பிறகு அவர் ₹20-ஐ Peon-க்கு கொடுத்தார்.

ACB அதிகாரிகள் சோதனை செய்தபோது, அந்த ₹20 பியூனிடமிருந்து மீட்கப்பட்டது.

ஆனால் ₹100 கிளார்க்கிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் கிளார்க், பியூன் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

இருவரும் மேல் முறையீடு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.

இறுதியாக உச்ச நீதிமன்றத்தை அடைந்தபோது, வழக்கில் பல முக்கியமான சந்தேகங்கள் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மாணவர் அளித்த வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் இருந்தன. மேலும், ACB அதிகாரிகள் முழு ₹120-ஐ லஞ்சமாகக் கேட்டால் கொடுக்கும்படி கூறியிருந்த நிலையில், மாணவர் ₹20-ஐ மட்டும் பியூனிடம் கொடுத்திருந்தார்.

கிளார்க் அருகிலேயே இருந்தபோதும் மீதமுள்ள ₹100 ஏன் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

₹20 பணம் Peon-யிடமிருந்து கிடைத்தது மட்டும் போதுமான ஆதாரம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

முதலில், அந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம்

அதற்கான ஆதாரம் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும் விசாரணையின்போது, பியூன் தன்னிடம் நேரடியாக லஞ்சம் கேட்டதாக மாணவர் கூறவில்லை என்பதும் தெரியவந்தது. மாணவர் வருமானச் சான்றிதழைப் பெற்ற பிறகுதான் ₹20 கொடுத்திருந்ததும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

பியூன், மறுநாள் ஈத்(Eid) என்பதால் மாணவர் அந்த ₹20-ஐ கொடுத்ததாக விளக்கம் அளித்திருந்தார். இந்த விளக்கம் நம்பத்தகுந்ததாக இருக்கலாம் என்றும் நீதிமன்றம் கருதியது.

இதையடுத்து, பணம் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டது என்பதைக் கொண்டு மட்டும் அது லஞ்சம் என்று நிரூபிக்க முடியாது; லஞ்சம் கேட்கப்பட்டது என்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில், கீழமை நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இரு அரசு ஊழியர்களையும் விடுதலை செய்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.