அவர் அம்மா, நான் பிள்ளை; கண்ணீரோடு வழியனுப்புகிறேன்- சௌகார் ஜானகிக்கு கமல்ஹாசன் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் காலமானார்.

இவருக்கு வயது 94. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சௌகார் ஜானகி

திரைத்துறை மற்றும் கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, மத்திய அரசு 2022-ம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்த சௌகார் ஜானகிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.

சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி

அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.