சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நவீன் (41). இவரின் மகள் க்ஷிபிஜா (13).

இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய க்ஷிபிஜா, வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கால்தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவி மரணம்

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவி க்ஷிபிஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது சில கேமராக்கள் பழுதாகியிருந்ததால் மாடியிலிருந்து மாணவி எப்படி கீழே விழுந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.