நாகை: வீட்டுக்கு தெரியாமல் தோழிக்கு நகை கொடுத்து உதவி; மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி!
நாகை மாவட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்து உதவ முயன்று சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் அந்தணப்பேட்டை புடவை கடை தெருவைச் சேர்ந்தவரின் மகள் சத்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வயது (16) இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் சத்யாவின் தோழி ஒருவர் சத்யாவிடம், தனது உறவினர் கடன் பிரச்சினையில் இருப்பதாகவும், அவர்களுக்கு பணம் அல்லது நகை கொடுத்து உதவுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி கேட்டார்.
இதனை நம்பி சத்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து தனது தோழிக்கு கொடுத்து இருக்கிறார்.
நகை கொடுத்த விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் தனது மகள் கொடுத்த நகையை மீட்டு தரும்படி சத்யாவின் பெற்றோர் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
போலீசார் சம்பந்தப்பட்ட சத்யாவின் தோழியிடம் இருந்து நகையை மீட்டு சத்யாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இருப்பினும், இது தொடர்பாக சத்யாவின் பெற்றோருக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு உள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சத்யா நேற்று முன்தினம் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நாகை போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உதவிக்காக வீட்டுக்கு தெரியாமல் நகை கொடுத்த விவகாரத்தில் சிறுமி ஒருவர தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


