``ஈரான் மீது வரலாறு காணாத பொருளாதாரத் தடை; ஈரானுக்கு உதவும் நாடுகளும்... - எச்சரிக்கும் ட்ரம்ப்
ஈரான் மீது இதுவரையில் இல்லாத அளவிலான கடுமையான பொருளியல் தடைகளையும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ளது. அதனால், சர்வதேச எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான வழித்தடமாகத் திகழும் ஹர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
நீரிணைப் பகுதி திறக்கப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ள போதிலும், `அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்படும் வரை அதை மீண்டும் சீராக இயக்க அனுமதிக்க முடியாது என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் ட்ரம்ப் ஈரானுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறிவரும் நிலையில், மற்றொருபுறம் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான், ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``"ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பை என்னைத் தவிர வேறு யாரும் வழங்கியதில்லை.
ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால், அவர்கள் அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். எனவே, ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கையை இன்று நான் அறிவிக்கிறேன். இது முன் எப்போதும் இல்லாத அளவிலான பொருளியல் போராகவும், தனிமைப்படுத்தலாகவும் இருக்கும். அவர்களின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது, விமானப்படை தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது, இராணுவத் தொழிற்சாலைகள் இடிபாடுகளாகக் கிடக்கின்றன. அவர்களின் நாணயம் மதிப்பிழந்துவிட்டது. அந்நாடே ஒரு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இன்று நான் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். ஈரானுக்கு எந்த வகையான வாழ்வாதாரத்தையும் வழங்குவதற்குத் தனது நிதி நிறுவனங்களையோ, வணிகங்களையோ, விமான நிலையங்களையோ அல்லது அரசு அமைப்புகளையோ அனுமதிக்கும் எந்தவொரு நாடும் மிகக் கடுமையான பொருளியல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
சட்டவிரோத எண்ணெய் கடத்தல், பணப் பரிவர்த்தனைகள், நாணய மாற்றகங்கள், கப்பல் பதிவுகள், போலி நிறுவனங்கள் இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். இது ஒரு பொருளியல் டி-டே (ECONOMIC D-DAY) ஆக இருக்கும். ஈரானிய அச்சுறுத்தலைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்க, நமது கூட்டாளி நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டும். இந்த வெறியர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் அவர்களை முடக்குவதோடு, உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்பும் அவர்களின் திறனையும் அழிக்கும். ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற முடியாது. இவ்விஷயத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

