”விஜய்யின் மெளனம் மலையை விடக் கடினமானது; அவர் பேசினால்...” - என்ன சொல்கிறார் நஞ்சில் சம்பத்?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய நாஞ்சில் சம்பத், ”தமிழக வெற்றிக் கழகம் இன்று பெற்றுள்ள வெற்றியை இந்திய துணை கண்டத்தில் எந்த ஒரு கட்சியும் பெற்றதில்லை.
பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் ஆனது, எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடிக்க 5 ஆண்டுகள் ஆனது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே முதல் விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சாமானியர்கள், எங்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை, ஜாதி, மத, பண பின்புலம் இல்லை, எந்த மூலதனம் இல்லாமல் மக்களையே மூலதனமாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி ஆட்சிக்கு வந்தார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய்.
அன்று என்.டி.ஆர் ஆந்திராவில் வெற்றி பெற்றார். அவர் ஆந்திராவில் நிகழ்த்திய அதிசயத்தை இன்று முதல்வர் விஜய் தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு த.வெ.க பெயரைச் சொல்வதற்கு அன்று நடுக்கம் இருந்தது. எங்கள் தலைவர் பெயரைச் சொல்வதற்கு அவர்களுக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், இன்றைக்கு எங்கள் தலைவரது பெயரைச் சொல்லாமல் ஒரு நாளை நகர்த்த முடியாமல் இருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கூட்டத்திலிருந்து ஒருவர் கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாத ஒரு நடிகை பெயரைக் கூறியதும் இரட்டை அர்த்தத்தில் பேச ஆரம்பித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது ஒரு நிழல் அமைச்சரைப் போன்றது. எந்தத் தரவுகளையும் ஆதாரத்தையும் சட்டமன்றத்தில் சொல்லி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கடமையைச் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். இன்றைக்கு தி.மு.க., மத்திய அரசை எதிர்த்து ஏன் போராடவில்லை? தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் போராடுகிறது, சட்டமன்றத்தில் அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறது. தி.மு.க என்ன செய்யப் போகிறது?
தன்னுடைய பேரன் பட்டம் பெறுகிறார் என்று லண்டன் சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின், தங்களது எம்.பி.,க்களுடன் காணொளியில் கலந்துரையாடும் போது தொகுதி மறுவரை குறித்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், பா.ஜ.கவைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டாம், நமது திருத்தத்தை ஏற்றுக் கொண்டால் தொகுதி மறுவரையை ஏற்றுக் கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தை பா.ஜ.க எப்படிக் காவிமயமாக்க முயற்சித்ததோ, அதேபோன்று தி.மு.க., கருணாநிதிமயமாக்க முயற்சித்தது. தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்கள் வைக்கப்படுகின்றன. முதல்வர் விஜய் பேசுவதில்லை என்று அதை ஒரு குறையாகக் கூறுகின்றனர். மலையின் மெளனத்தைவிட எங்கள் தலைவர் விஜய்யின் மௌனம் கடினமானது.
தேவைப்பட்டால் பேசுவார் தேவை வரும்போது பேசுவார், ஒரு நாள் பேசியதற்கு நீங்கள் ஒன்பது நாள்கள் தூங்கவில்லை, மீண்டும் பேச ஆரம்பித்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? த.வெ.க. விசில் சத்தத்தில் தி.மு.க., கல்லறைக்குப் போகுமே தவிர ஆட்சிக் கட்டிலுக்கு வராது” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


