தவெகவுக்கு முன்னாள் அதிமுக வேட்பாளர்; அதிமுகவுக்கு முன்னாள் திமுக வேட்பாளர்! - இது எடப்பாடி ஸ்கெட்ச்
பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் தவெக இடையிலான போட்டி புதிய அரசியல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார், தற்போது தவெக சார்பில் களமிறங்க உள்ள நிலையில், திமுக சார்பில் ஏற்கெனவே போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுக வேட்பாளராக நிறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த ஜெயக்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இதையடுத்து பெருந்துறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமார், தற்போது தவெக வேட்பாளராக களமிறங்க உள்ளார். இதனால், தான் வெற்றி பெற்ற தொகுதியிலேயே வேறு கட்சியின் வேட்பாளராக அவர் மீண்டும் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
அதிமுகவின் புதிய வியூகம்
இந்த நிலையில், ஜெயக்குமாரை எதிர்கொள்ள அதிமுக சார்பில் ஏற்கெனவே பெருந்துறை தொகுதியில் பரிச்சயமான ஒருவரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், திமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மட்டுமல்லாமல், அமைச்சராகவும் பணியாற்றியவர். கடந்த காலங்களில் திமுகவின் முக்கிய நிர்வாகியாகவும், ஈரோடு மாவட்ட அரசியலில் செல்வாக்கு மிக்க நபராகவும் இருந்துள்ளார்.
அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திமுகவில் இருந்து விலகி வேறு அரசியல் முடிவை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அவரை அதிமுகவுக்குள் கொண்டு வந்து பெருந்துறை இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது நெருங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் தன் கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா?
பெருந்துறை தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களாக அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே இருந்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும் பெருந்துறையை, இடைத்தேர்தலில் எந்த சூழலிலும் கைநழுவ விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் குறித்து பரவலாக பேசப்பட்டபோதிலும், பெருந்துறை தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் மூன்றாவது இடத்தையே பெற்றிருந்தார். தற்போது அதே தொகுதியில் அதிமுகவின் முன்னாள் வேட்பாளர் ஜெயக்குமார், தவெக சார்பில் களமிறங்க உள்ளதால், போட்டி வேறு பரிமாணத்தை எட்டியுள்ளது.

ஜெயக்குமாருக்கு தொகுதியில் ஏற்கெனவே உள்ள அறிமுகம், தவெகவின் வாக்கு வங்கி ஆகியவற்றை எதிர்கொள்ள, அதிமுக சார்பில் தொகுதியில் நன்கு அறிமுகமான, ஏற்கெனவே தேர்தல் களத்தை சந்தித்த வேட்பாளரை நிறுத்துவது சாதகமாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்குப் போடுவதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே முன்னாள் திமுக வேட்பாளரான தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுக பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பெருந்துறை இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் ஏற்கெனவே வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள், இந்த முறை கட்சி மாறி நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இணைவது மற்றும் அவரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு பெருந்துறை இடைத்தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


