தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது! - அருகருகே அமர்ந்திருக்கும் விஜய், டி.கே சிவகுமார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், தென் மாநிலங்களின் முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் நேரில் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் சந்தித்து பேசினர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக பங்கேற்றிருக்கிறார்.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
இதில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இந்த தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமாரும், தமிழக முதல்வர் விஜய்யும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர்.
தென் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நதிநீர் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனைகள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
குறிப்பாக மேகதாது அணை விவகாரம், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை, காவிரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனைகள், போதை பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்கு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும், ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


