Deepa Venkat: இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வரக் காரணம் இதான் - தீபா வெங்கட் ஷேரிங்ஸ்
ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் ராம் & லீலா நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகையும், டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் நடிப்பின் பக்கம் வந்திருக்கிறார். கம்பேக் குறித்து சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார்.
அவர், "ரொம்ப சந்தோஷமா இருக்கு. இத்தனை வருஷம் கழிச்சு நான் நடிக்க வர்றதுக்குத் தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு பலரும் வாழ்த்து சொல்றாங்க. இவ்வளவு வருஷம் எனக்கு வாய்ப்புகள் வராமலில்லை. சீரியல், படங்கள், வெப் சீரிஸ்னு எனக்குத் தெரிஞ்சவங்களே நிறைய பேர் நடிக்கச் சொல்லி கேட்டாங்க.
அந்த நேரத்து மனநிலைதான், அந்த வாய்ப்புகளைத் தேர்வு பண்றது பக்கம் நகர்த்தும். அப்படி இந்த ராம் & லீலா கதை என்னை நகர்த்தியிருக்கு. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் கதை சொல்லும்போதே, அடுத்து என்ன நடக்கபோகுதுனு ஒரு எதிர்பார்ப்பும் எனக்கு வந்துச்சு.
இதைப் பண்ணினால் நல்லா இருக்கும்னு நினைச்சு ராம் & லீலா படத்தைத் தேர்வு செய்து நடிச்சிருக்கேன்" என்றவர், வாரணம் ஆயிரம் படத்தின் டப்பிங் நினைவுகள் பற்றிப் பேசினார்.
அவர், "அந்தப் படத்துக்குக் கூப்பிட்டப்போ நான் கொஞ்சம் அப்செட்டாக ஃபீல் பண்ணினேன். ஏன்னா, அப்போ நான் ஹீரோயின் கேரக்டருக்கு டப்பிங் பேசிட்டு இருந்தேன். ஆனா, திடீர்னு வயதான கேரக்டருக்கு பேச சொல்றாங்களேனு நினைச்சேன்.
ஆனால், அப்புறம்தான் சிம்ரன் வந்து அந்தக் கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்க. நம்ம என்ன குரல் கொடுக்கிறதுக்கு யோசிக்கிறோமேனு தோணுச்சு.
அந்தக் கதாபாத்திரத்துக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் டப்பிங் பேசினேன். ஆனா, அந்த ப்ராசஸை கெளதம் மேனன் சார் எளிமைப்படுத்தினார்" என்றவர், "ஒரு கட்டத்துல ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச போனாலே எனக்கு ரிஜெக்ஷன்ஸ்தான் நடந்தது. அவங்க எதிர்பார்த்தது கிடைக்கலைனு சொல்வாங்க" என்றார்.

தொடர்ந்து மயக்கம் என்ன யாமினி கதாபாத்திரம் பற்றி பேசுகையில், "யாமினிகூட ஒரு பர்சனல் கனெக்ட் ஏற்பட்டுச்சு. அது இருந்தால்தான் கச்சிதமான டப்பிங் பணியையும் செய்ய முடியும்.
ஒரு கதாபாத்திரம் பற்றி நமக்கு இயக்குநர் எடுத்துரைக்கிற விஷயம் ரொம்பவே முக்கியம். அதுல செல்வராகவன் சார் மாஸ்டர். ஒவ்வொரு காட்சிக்கும், இப்படியான நுணுக்கங்கள் வேணும்னு சொல்வார்" எனப் பகிர்ந்துகொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


