``முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்.! - வைகோ நம்பிக்கை!
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு குறித்து மதிமுக தலைவர் வைகோ நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ``மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை ஒன்றும் ஆச்சரியகரமானது அல்ல. இருப்பினும், அவரது போக்கும் நடவடிக்கைகளும் அனைத்து மாநிலங்களின் தனித்தன்மையையும் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், மாநில உரிமைகளைச் சாடியும், இந்தி ஆதிக்கத்தையும் இந்துத்துவா கொள்கையையும் நிலைநாட்டத் துடிக்கும் அமித் ஷா மீது எங்களுக்கு எந்தவித நம்பிக்கையோ அல்லது உடன்பாடோ கிடையாது. மேகதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு முழங்கி வரும் சூழலில், அம்மாநிலத்தில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட அநியாயம் நடந்துள்ளது.
தமிழர்களைக் கொடூரமாகக் கொன்றவர்களை உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மற்ற மாநில தலைவர்கள் தலையிடத் தேவையில்லை எனக் கர்நாடக முதல்வர் கூறியிருப்பது அவரது அகந்தையையும் ஆணவத்தையும் காட்டுகிறது. இது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு முதல்வர் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், மேகதாட்டு விவகாரம் குறித்துக் கண்டிப்பாக வலியுறுத்துவார்.

இதில் தமிழ்நாடு அரசு தனது உரிமையை இம்மியளவும் விட்டுக் கொடுக்காது என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. இதே நேரத்தில் உள்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் இருக்கும் சூழலில், இருவரிடமும் ஒரே நேரத்தில் பேச முடியாது. முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் இலக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தனது பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டிச் செல்ல விரும்பவும் மாட்டார், அதற்கான முயற்சியிலும் ஈடுபட மாட்டார்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
