Vikram: கிப்பன் குரங்கு விவகாரம்; ஆப்பிரிக்க பூனை உட்பட 11 விலங்குகளை வண்டலூருக்கு மாற்றும் வனத்துறை
அரிய வகை மனித குரங்கு இனமான லார் கிப்பன் குட்டியுடன் விளையாடிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார், நடிகர் விக்ரம். வனத்துறையினரால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவரிடம் இருந்து லார் கிப்பன் குரங்கை தன்னுடைய சம்பந்தி சென்னைக்கு கொண்டு வந்ததாகத் தெரிவித்திருந்தார். கேசவநாதன் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், அதனை உறுதி செய்தனர். 3 கிப்பன் குரங்கு குட்டிகளில் ஒன்று இறந்தது குறித்து வனத்துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்காதது, அரிய வகை விலங்குகளை வைத்திருத்தல் போன்ற குற்றங்களால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கேசவநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பண்ணையில் உள்ள 2 கிப்பன் குரங்குகள் மட்டுமன்றி அரியவகை ஆப்பிரிக்க பூனைகள் உள்ளிட்ட 11 விலங்குகளை மீட்டு, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், ``கேசவநாதன் பண்ணையில் 2 கிப்பன் குரங்குகள், 7 ஆப்பிரிக்க அரியவகை செர்வல் பூனைகள், 2 டஃடெட் கப்புச்சின் குரங்குகள் இருப்பதைக் கண்டறிந்தோம். நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் இந்த விலங்குகளை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


