தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்... - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!
சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், முதல்வர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்? என்று சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, ``நான் புதுச்சேரியில் எம்.எல்.ஏவாக இருந்தேன். சாதாரண ஆள். கவுன்சிலர் அளவுக்குதான் அங்கே ஓட்டு. இங்கே நான் அமைச்சராக இருக்கிறேன் என்றால் தலைவர்தான் காரணம்.
துணை சபாநாயகரை தேர்தலில் நிறுத்திய போது என்னிடம் 75000 ரூபாய்தான் இருக்கிறது என்றார். அது போதும் நீ நில்லு நான் பார்த்துக் கொள்கிறேன் என தலைவர் சொன்னார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் யார் யாரெல்லாமோ சீட் கேட்டார்கள். அங்கே ஒன்றியத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்காமல் யார் யாருக்கோ ஏன் கொடுக்க நினைக்கிறாய் என தலைவர் கேட்டார். பணம் இல்லை என்கிறார்கள் என்றேன். கட்டுத்தொகைக்கு பணம் இருந்தால் போதும். வரச் சொல் என்றார். சென்ட்ரிங் வேலைக்கு 1500 ரூபாய் சம்பளத்துக்கு செல்லும் தொழிலாளியை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கிறோம். சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து, தலைவருக்காக விழுந்த வாக்குகள் அவை.
ஒரு நேரத்தில் ஏண்டா இவர் அரசியலுக்கு வந்தார்? என தலைவரை பார்த்து நினைத்திருக்கிறேன். யூடியூபில் இரண்டரை வருடமாக அவரை இளக்காரமாக திட்டாத திட்டு இல்லை. வாடகை வாய்கள் அவரை பேசாத பேச்சில்லை. அவங்க பேசினால் பேசிக்கட்டும் நமக்கென்ன... என கேட்பார்.

தலைவரிடம் போய், எல்லாரும் கூட்டணி வைக்கிறார்கள். நாம் தனியாக நிற்கிறோமே... என்றேன். தைரியமாக தில்லாக தனியாக நிற்போம் என்றார். கண்டிப்பா ஜெயிப்போம் உனக்கே பயமா? எனக் கேட்டார்.
`தமிழ்நாட்டு மக்கள் என்னை உச்சத்தில் தூக்கி வைத்தார்கள். அப்படி உச்சத்தில் இருக்கும் போதே மக்களுக்காக அரசியலுக்கு வர வேண்டும். ரிட்டையர்டு ஆன பிறகு அரசியலுக்கு வர எனக்கு விருப்பமில்லை என நம்பிக்கையோடு கூறினார். 2 கோடியை ஒரு பக்கம் வைத்து தலைவர் படத்தையும் ஒரு பக்கம் வைத்தால் தலைவர் படத்தைதான் எங்களின் உறுப்பினர்கள் எடுப்பார்கள்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


